யூடியூப் லைக்குக்காக குளித்துக் கொண்டே வாகனம் ஓட்டிய இளைஞர்கள்; சிறப்பாக கவனித்த போலீசார்

By Velmurugan sFirst Published May 19, 2023, 10:13 AM IST
Highlights

தஞ்சாவூரில் குளித்துக் கொண்டே இரு சக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞருக்கும், அதை விடியோ பதிவு செய்த அவரது நண்பருக்கும் காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மற்றும் பெரியகோயில் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளாகும். இந்நிலையில் இப்பகுதிகளில் நிலவும் கடும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் விதமாக இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தின் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே வாகனத்தை ஓட்டினார். இதை மற்றொரு இளைஞர் தனது செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்.

இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக, இருவர் குறித்தும் மேற்கு காவல் நிலைய காவல் துறையினர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவினர் விசாரணை நடத்தினர். இதில், வாகனத்தை ஓட்டியவர் கீழவாசல் குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அருணாசலம் (வயது 23), இதை வீடியோ எடுத்தவர் குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசன்னா (24) என்பது தெரிய வந்தது.

இருசக்கர வாகனத்திற்கு வழிவிடாததால் பேருந்து நடத்துநரை கொலைவெறியுடன் தாக்கிய 5 பேர் கைது

இதையடுத்து, அருணாசலம், பிரசன்னாவுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இருவரையும் இனிவரும் காலத்தில் இதுபோன்று பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் சமூக வலைதளங்களில் பிரபலமடையவும், யூடியூப் லைக்குக்காகவும் இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று காவல் துறையினர் கேட்டுக் கொண்டனர்.

நீலகிரியில் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொண்ட 2 காட்டு யானைகள்

click me!