உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மரணம்... மனைவி இறந்த மூன்றாவது நாளில் சோகம்

By Asianet TamilFirst Published Aug 27, 2020, 8:50 AM IST
Highlights

தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் மாரடைப்பால் காலமானார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி 78 வயதான ஏ.ஆர். லட்சுமணனுக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். அவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மதியம் அவருடைய சொந்த ஊரான தேவக்கோட்டையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்புதான் அவருடைய மனைவி மீனாட்சி உடல்நலக் குறைவால் காலமானார். மனைவி இறந்த மூன்றாவது நாளே ஏ.ஆர். லட்சுமணன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர். லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கேரள உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பதவி வகித்தவர். பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர். கடந்த 2002-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2007-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். நாடு முழுவதும் பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை விதித்து தீர்ப்பளித்தவர் ஏ.ஆர். லட்சுமணன். இவர் சட்ட ஆணைய தலைவராகவும் இருந்துள்ளார்.
 

click me!