பெண்ணின் வயிற்றுக்குள் ஊசியை வைத்து தைத்த செவிலியர்கள்..! பிரசவத்தின் போது நிகழ்ந்த கொடூரம்..!

By Manikandan S R SFirst Published Nov 21, 2019, 12:56 PM IST
Highlights

ராமநாதபுரம் அருகே பிரசவத்தின் போது தவறுதலாக பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்த செவிலியர்களால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இருக்கிறது வலசை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரம்யா(21). நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 17 ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ரம்யாவை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அங்கிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். ஆனால் அன்று ரம்யாவிற்கு குழந்தை பிறக்கவில்லை.

இதனிடையே இரண்டு நாட்கள் கழித்து 19 ம் தேதி ரம்யாவிற்கு மீண்டும் பிரசவ வலி வந்துள்ளது. அந்த சமயத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் செவிலியர்களே பிரசவம் பார்த்துள்ளனர். அதில் ரம்யாவிற்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு கடந்த இரண்டு நாட்களாக ரம்யாவிற்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.அதனுடன் தொடர்ச்சியாக ரத்த கசிவும் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரம்யாவை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அப்போது ரம்யாவின் வயிற்றில் அறுவை சிகிச்சைக்கு பயன்படும் ஊசி இருப்பது தெரிய வந்தது.

பிரசவத்தின் போது குழந்தையை வெளியே எடுத்துவிட்டு செவிலியர்கள் ஊசியை வைத்து தைத்துள்ளனர். இதைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கவனக்குறைவாக செயல்பட்ட செவிலியர்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவலர்கள் உறுதியளித்தனர்.

இதனிடையே ரம்யா தற்போது மருத்துவர்களின் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு முறையான அறுவை சிகிச்சை செய்து ஊசி பத்திரமாக வெளியே எடுக்கப்படும் என்று சுகாதார துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!