திண்டுக்கல் மக்களவை தொகுதியை கேட்டு வாங்கிய பாமக.. யார் இந்த திலகபாமா? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

By vinoth kumarFirst Published Mar 24, 2024, 6:25 AM IST
Highlights

திண்டுக்கல் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக போட்டியிடாதது பாமகவிற்கு சாதகம். இந்நிலையில் அங்கு ஏற்கனவே அந்த தொகுதியில் பரீட்சியமான பெண் வேட்பாளரை பாமக நிறுத்தி இருப்பது, களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திமுக, அதிமுக பிரதான கட்சிகள் களமிறங்காமல் கூட்டணி கட்சிகளுக்கு திண்டுக்கல் மக்களவை தொகுதியை ஒதுக்கியுள்ளதால் பாமக வேட்பாளர் திலகபாமா வெற்றி பிரகாசமாக உள்ளதாக அரசியல் கள நிலவரம் கூறுகிறது. 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. அதில், திண்டுக்கல் - கவிஞர் திலகபாமா, அரக்கோணம் - கே.பாலு, ஆரணி - கணேஷ் குமார், கடலூர் - தங்கர் பச்சான்,  மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார், சேலம்  - அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர், காஞ்சிபுரம்  - ஜோதி வெங்கடேசன்,  தருமபுரி – சவுமியா அன்புமணி ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் திண்டுக்கல் தொகுதியில் கவிஞரும், பாமக மாநில பொருளாளருமான திலக பாமா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

யார் இந்த திலக பாமா? 

எழுத்தாளர், கவிஞர், இலக்கிய பேச்சாளர் என பன்முகத்திறமையாளராக வலம் வரும் திலக பாமா, பாமகவில் மாநில பொருளாளராக பொறுப்பு வகித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த இவர், மதுரையில் கல்லூரி படிப்பை முடித்தார். தற்போது சிவகாசியில் வசித்து வரும் இவர், 2016ம் ஆண்டு சிவகாசி சட்டமன்ற தேர்தலிலும், 2021ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் பாமக சார்பில் களமிறக்கப்பட்டார்.

இதையும் படிங்க: சிதம்பரம் தொகுதியில் திருமாவை எதிர்த்து களமிறங்கும் பாஜக வேட்பாளர்.. யார் இந்த கார்த்தியாயினி?

கடந்த தேர்தலில் திண்டுக்கல்லில் பாமக தோல்வியை தழுவி இருந்தாலும், சொந்த மண்ணைச் சேர்ந்த திலக பாமாவை களமிறக்கி இருப்பதும், வன்னியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான திண்டுக்கல்லில் மாம்பழம் பரிட்சையமான சின்னமாகவும் மாறியுள்ளதும் பாமகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது. ஆகையால் தான் பாஜக கூட்டணியில் திண்டுக்கல் தொகுதியை பாமக கேட்டு வாங்கியதாக கூறப்படுகிறது. 

திலக பாமா வாக்குறுதிகள்:

திண்டுக்கல்லில் தோல் தொழில் நலிவடைவதை தவிர்க்க, தோல் தொழிற்சாலைகளால் ஏற்படக்கூடிய கழிவுகளால் சுற்றுப்புறச்சூழலையும் காப்பாற்றி, தொழிற்சாலைகளும் எவ்வித சிக்கலும் இன்றி இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பூட்டு தொழில் நலிவடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார். 

கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்குத் தேவையான கல்வி, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து கொடுக்கப்படும். மல்லிகை பூ விவசாயத்தை காக்கும் வகையில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் சென்ட்  தொழிற்சாலை அமைக்கப்படும், சின்னாளப்பட்டு சேலை நெசவாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நெசவு பூங்கா அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். 

பாமகவின் வெற்றி வாய்ப்பு எவ்வளவு? 

கடந்த முறை வெற்றி பெற்ற திமுக வேட்பாளரான வேலுச்சாமி திண்டுக்கல்லில் உள்ள அலுவலகத்திற்கே சரியாக வருவதில்லை என்றும், அப்படியே வந்தாலும் மக்களிடம் குறை கேட்பது கிடையாது என்றும் ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதும். குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதி, சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை தேவைகள் என எதையும் கண்டு கொள்வதில்லை என்ற மக்களின் புகாரும் எழுந்துள்ளது. ஆளும் கட்சி வேட்பாளர் மீதான மக்களின் அதிருப்தி திலக பாமாவிற்கு சாதகமாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க:  சிம்லா முத்துச்சோழனுக்குப் பதில் ஜான்சி ராணி! நெல்லை தொகுதி அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம்!

திண்டுக்கல் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக போட்டியிடாதது பாமகவிற்கு சாதகம். இந்நிலையில் அங்கு ஏற்கனவே அந்த தொகுதியில் பரீட்சியமான பெண் வேட்பாளரை பாமக நிறுத்தி இருப்பது, களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  தொடர்ந்து திலகபாமா அப்பகுதியில் கட்சி பணி செய்வதால் கட்சி கட்டமைப்பும் அதிகரித்திருப்பதால் இம்முறை பாமக இத்தொகுதியை பாஜக மற்றும் அமமுக உதவியுடன் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

click me!