டெல்லிக்கு கோவணத்தோடு போவேன்... நடிகர் மன்சூரலிகான் அதிரடி வாக்குறுதி!

By Asianet TamilFirst Published Apr 6, 2019, 8:37 AM IST
Highlights

திண்டுக்கல்லில் என்னை வெற்றி பெற வைத்தால், தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக கோவணத்தோடு டெல்லி நாடாளுமன்றத்துக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூரலிகான் அதிரடியான வாக்குறுதியை அறிவித்துள்ளார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் களமிறங்கியிருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். தெருக்களைப் பெருக்குவது, சட்னி அரைப்பது, பரோட்டோ சுசுவது, டீ போடுவது என தினந்தோறும் ஸ்டீரிட் ஷோக்களை நடத்தி ஒட்டுச் சேகரிப்பில் ஈடுபட்டு, திண்டுக்கலை அமர்க்களப்படுத்திவருகிறார். இந்நிலையில் திண்டுக்கல்லில் தான் வெற்றி பெற்றால், செய்யப்போகும் விஷயங்களைப் பற்றி பேசி திண்டுக்கல்லில் வாக்கு சேகரித்தார். அப்போது புதிய அறிவிப்புகளை அவர் வாக்குறுதிகளாக அளித்தார்.
 “நான் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சின்னமான விவசாயி உடையில் வர வேண்டும் என நினைத்தேன். அதற்கு கோவணம் கட்டிகொண்டுதான் நான் வர வேண்டும். கோவணம் கட்டிக்கொண்டு வந்தால், ஒரு மாதிரியாக இருக்கும். அதனால் தவிர்த்து விட்டேன். ஆனால், திண்டுக்கல்லில் நான் வெற்றி பெற்றால் தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்துக்கு கோவணம் கட்டிக்கொண்டு செல்வேன்.
வரும் ஐந்து ஆண்டுகளில் திண்டுக்கல் எங்கே போகப்போகிறது எனப் பாருங்கள். திண்டுக்கல் பகுதியைச் சுற்றியுள்ள 12 ஆறுகளை இணைக்கப்போகிறேன். அதன்மூலம் ஓடைகளை அமைத்து இயற்கை விவசாயத்தை 100 சதவீதம் கொண்டுவருவேன். இங்கே வெற்றி பெற வைத்தால், விமானத்தில் சென்றாலும் 100 பேரை அழைத்துகொண்டு செல்வேன். இதற்கு ஒரு ஸ்பான்சரை பிடித்துவிட்டால் போதும். சினிமாவில் எத்தனை ஸ்பான்சர் பிடிக்கிறோம். ஒரு ஷோவுக்கு கோடிக்கணக்கில் வசூல் பண்றோம். அதில்கூட, பாதியை ஆட்டையைப் போட்விடுகிறார்கள். அதெல்லாம் தனிக் கதை.” என்று பேசி மன்சூரலிகான் வாக்கு சேகரித்தார்.
 

click me!