டீ போட்டு.. இளநீர் வெட்டி...பாலீஷ் போடும் மன்சூரலிகான் திண்டுக்கல்லில் நடிகரின் தேர்தல் அலப்பறைகள்..!

By Asianet TamilFirst Published Mar 30, 2019, 8:11 AM IST
Highlights

திண்டுக்கல் தொகுதியில் பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் வழக்கமான பாணியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்க, நடிகர் மன்சூரலிகான் நூதனமான முறையில் பிரசாரம் செய்து கலக்கிவருகிறார்.

அதிரடியாகவும் சரவெடியாகவும் பேசுவதில் நடிகர் மன்சூரலிகான் தனி ரகம். இந்த முறை நாம் தமிழர் கட்சியில் திண்டுக்கல் தொகுதியில் அவர் களமிறங்கி இருக்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே திண்டுக்கல்லில் தனது வழக்கமான பாணியில் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். பிற கட்சியினர் போல, படோடமாகப் பிரசாரம் செய்யாமல், எளிமையாகவும் அதேசமயம் நூதனமாகவும் பிரசாரம் செய்துவருகிறார்.


தினந்தோறும் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் காலையிலேயே பிரச்சாரத்தை தொடங்கிவிடுகிறார் மன்சூர். நாம் தமிழர் கட்சிக் கொடியுடன் 5 பேர் மட்டும் உடன் வருகிறார்கள். மார்க்கெட்டில் வருவோர் போவார் எல்லோரிடமும் ஓட்டு சேர்கரிக்கிறார். திடீரென குப்பைகளைப் பெருக்கி வாக்கு சேகரிக்கிறார்.
கொடைக்கானலில் டீக்கடைக்குள் சென்ற அவர், டீ போடுபவரை ஓரமாக நிற்க வைத்துவிட்டு அவரே டீ போட்டு வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கத் தொடங்கிவிட்டார். அப்படியே ஓட்டும் கேட்கிறார். இதேபோல சின தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் துப்புரவுத் தொழிலாளிகளின் கூடையை வாங்கி குப்பைகளை அள்ளிப் போட்டு ஓட்டு சேகரித்தார்.
நேற்று திண்டுக்கல்லில் வீதி வீதியாக வலம் வந்த மன்சூர், ஒரு வீட்டு வாசலில் ஒரு பெண் சட்னி அரைப்பதைக் கண்டு, அந்தப் பெண்ணிடம் பிடிவாதமாக அம்மியை வாங்கி, சட்னி அரைத்து தந்து ஓட்டு கேட்டார். இதேபோல இளநீர் கடையில் இள நீரை வெட்டி ஓட்டுக் கேட்பது,

செருப்புத் தொழிலாளியிடம் சென்று ஷூக்களுக்கு பாலிஷ் போட்டு போடுவது என எளிமையாகவும் நூதனமாகவும் வாக்கு சேகரித்துவருகிறார்.
மன்சூரலிகான் ஓட்டு கேட்டு வருகிறார் என்றாலே, அந்த இடத்தில் இப்போது கூட்டம் சேர்ந்துவிடுகிறது. அவருடைய நூதனமான பிரசாரத்தைப் பார்க்கவே கூடிவிடுகிறார்கள். 
 

click me!