ஹெல்மெட் இல்லாம ஏன் வந்த..? சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனிடம் கறார் காட்டிய காவலர்!!

Published : Sep 17, 2019, 12:57 PM ISTUpdated : Sep 17, 2019, 03:39 PM IST
ஹெல்மெட் இல்லாம ஏன் வந்த..? சைக்கிளில் சென்ற பள்ளி மாணவனிடம் கறார் காட்டிய காவலர்!!

சுருக்கம்

பென்னாகரம் அருகே சைக்கிளில் வந்த பள்ளி மாணவனிடம் ஹெல்மெட் இல்லாமல் வந்ததாக அபராதம் வசூலிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே இருக்கும் ஏரியூரில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியன். பணிபுரியும் இடத்திலேயே இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கிறது எனவும் இதன்காரணமாக  எந்த காவல்நிலையத்திலும் இவர் ஆறு மாதங்களுக்கு மேல் பணியாற்றியது இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ஏரியூரில் சுப்ரமணியன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக பள்ளி மாணவர் ஒருவர் தமிழக அரசு சார்பாக கொடுக்கப்பட்ட விலையில்லா மிதி வண்டியில் வந்து கொண்டிருந்தார். அந்த மாணவனை காவலர் சுப்ரமணியன் வழி மறித்தார். பின்னர் ஏன் ஹெல்மெட் அணிந்து வரவில்லை என்று மாணவனிடம் சுப்ரமணியன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

சைக்கிளில் வந்ததற்கு எதற்கு ஹெல்மெட் என்று முழித்த மாணவனிடம் அபராதம் செலுத்தி விட்டு சைக்கிளை பெற்றுக் கொள்ளுமாறு பறிமுதல் செய்திருக்கிறார். அவர் மாணவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் சென்றிருக்கிறார். ஆனால் அதை சுப்ரமணியன் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

நீண்ட நேரம் காத்திருப்புக்கு பின், மாணவனையும் சைக்கிளையும் விடுவித்திருக்கிறார். இவை அனைத்தையும் ஒருவர் தனது மொபைல் போனில் காணொளியாக பதிவு செய்திருந்தார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஆனால் இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல்துறை, சிறுவன் இரண்டு கைகளையும் விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டிய காரணத்தினாலேயே பிடித்து வைத்ததாக தெரிவித்துள்னர்.

PREV
click me!

Recommended Stories

பாம்பை கழுத்தில் போட்டு கொண்டு டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர்! அலறி ஓடிய குடிமகன்கள்!
தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி மையங்களில் வேலைவாய்ப்பு: 135 காலிப்பணியிடங்கள்! முழு விவரங்களுக்கு…