
புதுச்சேரி பகுதியில் நேற்று ஒரே இரவில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை மற்றும் நிவர் மற்றும் புரெவி புயலில் பெய்த கனமழையால் ஏரி, குளம் என பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மழை இல்லை. ஆனால், பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இந்நிலையில், வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாகவும், கீழ் அடுக்கில் கிழக்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 2 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு புதுச்சேரியில் மழை பெய்ய தொடங்கியது. நேரமாக நேரமாக கனமழையாக மாறியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்த வண்ணம் உள்ளது. அதிலும் அதிகாலை 4 மணிக்கு மேல் தொடர்ந்து கனமழை பெய்தது. மேலும், குளிர்ந்த காற்றும் வீசித்தொடங்கியது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கி உள்ளது.
நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் வீடுகளை சுற்றி மழை வெள்ளம் சூழ தொடங்கி உள்ளது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கடலூர், புதுச்சேரியில் அதிகபட்சமாக 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது.