
கடலூர் அருகே தூக்கணாம்பாக்கம் அடுத்த பள்ளிப்பட்டு காலனியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (48). கடந்த உள்ளாட்சி தேர்தலில் பள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமச்சந்திரன் என்பவருக்கு ஆதரவாக வேலை செய்தார். ராமச்சந்திரனுக்கு எதிராக ரவி என்பவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் ராமச்சந்திரன் ஆதரவாளர் ஜனார்த்தனனுக்கும், ரவி ஆதரவாளர் குமாருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த 2020ம் ஆண்டு ஜனார்த்தனன், அவரது தரப்பை சேர்ந்த கூலி தொழிலாளி கமலக்கண்ணன்(40) ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குமார் தரப்பினருக்கும், ஜனார்த்தனன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஜனார்த்தனன் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த கமலக்கண்ணன், சிவா, ஜெயசீலன் உள்பட 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் கமலக்கண்ணன் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார்(48), வெங்கடேசன்(32), மணியரசன்(29), கிருஷ்ணராஜ்(53), சிலம்பரசன்(28), வினோத்குமார்(28), பாரதிதாசன்(28), அரவிந்த்(30), சிவராமன், பரத்வாஜ்(30) உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதில், வழக்கில் தொடர்புடைய சிவராமன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து இறந்த நிலையில் குமார் உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி தீர்ப்பளித்தார். இதில் சிலம்பரசன் ஏற்கனவே 2021ம் ஆண்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மற்ற 8 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பை அறிந்த குற்றவாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.