6 வருட காதல் மனைவி செய்த செயலால் விபரீத முடிவெடுத்த கணவர்!!

By Asianet TamilFirst Published Aug 30, 2019, 3:19 PM IST
Highlights

கோயம்புத்தோர் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே இருக்கும் நரிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகன் பாலகுரு(27). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தெய்வநாயகி(23) என்கிறவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் வர்ஷிகா என்கிற மகள் இருக்கிறாள்.

பாலகுரு, மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்திருக்கிறார். அவரது மனைவி தெய்வநாயகி, சினிமா, சின்னத்திரை தொடரில் நடிப்பவர்களுக்கு டப்பிங் எனப்படும் பின்னணி குரல் கொடுக்கும் வேலை செய்து வந்தார். இதன் காரணமாக தெய்வநாயகி சென்னைக்கு அடிக்கடி சென்று வரும் நிலை இருந்திருக்கிறது.

திருமணமான ஆரம்ப காலங்களில் மனைவி சென்னை சென்று வருவதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பாலகுரு, பின்னாளில் குழந்தை பிறந்ததால் அதுகுறித்து பேசி வேலையை விட்டுவிடுமாறு கூறியிருக்கிறார். இதனால் கணவன், மனைவி இடையே தினமும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. தகராறு முற்றிய நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தெய்வநாயகி கணவனை விட்டு பிரிந்து தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனிடையே விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார் பாலகுரு. இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மனைவி, மகளுடன் சேர்ந்து சந்தோசமாக வாழ முடியாததால் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்திருக்கிறார் பாலகுரு.

சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு வந்த பாலகுரு வீட்டில் இருக்கும் தனது அறைக்கு உறங்கச் சென்றிருக்கிறார். காலை வெகுநேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால் அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்திருக்கின்றனர். அப்போது பாலகுரு அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கிறார். அதைப் பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். 

அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பாலகுரு வீட்டிற்கு வந்த காவல்துறை அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் மனைவி பிரிந்து போன ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!