தமிழ் மண்ணைக் காப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிர்வாகி ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
காவிரி நதியை காப்பதற்காகவும், அதைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஈஷா அறக்கட்டளை சார்பாக 'காவிரி கூக்குரல்' என்னும் இயக்கத்தை அந்த அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. திரை பிரபலங்களும் சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகாவின் தல காவிரியில் இருந்து தமிழகத்தின் திருவாரூர் வரை ஜக்கி வாசுதேவ் இருசக்கர பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் வழியே பல நிகழ்ச்சிகள் ஈஷா கட்டளை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 11 ம் தேதி கர்நாடகாவில் பயணத்தை முடித்து தமிழகம் வந்தார். நேற்று கோபிசெட்டிபாளையம் அருகே இருக்கும் மேவானி கிராமத்திற்கு ஜக்கி வாசுதேவ் வந்தடைந்தார். அங்கு செந்தில் என்பவரின் தோட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்தியில் பேசிய ஜக்கி வாசுதேவ், 12 ஆயிரம் ஆண்டுகளுக்கும் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் விவசாயம் நடைபெற்று வருவதாகவும் கடந்த 2 இரண்டு தலைமுறைகளில் தான் 42 சதவீத விவசாய நிலங்கள் மலடாகிவிட்டதாக குறிப்பிட்டார்.
மேலும் விவசாயத்தை மீட்க விவசாய சங்கத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குரல் கொடுத்தால் தான் தமிழ் மண்ணைக் காக்க முடியும் என்று தெரிவித்தார்.