முதல்வர் வீட்டில் பணியில் இருந்த காவலருக்கு கொரோனா இல்லை..! காவல்துறை அறிவிப்பு..!

By Manikandan S R SFirst Published May 7, 2020, 2:43 PM IST
Highlights

44 வயதான அப்பெண் காவலருக்கு நடந்த 2ம் கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட அக்காவலர் முதல்வர் வீட்டில் பணியமர்த்தப்படவில்லை எனவும் காவல்துறை சார்பாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை நேற்று இதுவரை இல்லாத அளவை எட்டியிருக்கிறது. நேற்று ஒரேநாளில் 771 பேருக்கு தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்திருக்கிறது. தற்போதைய நிலவரப்படி 1,516 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 36 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு தொற்று உறுதியாகி 2,238 பேர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமி வீட்டில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்ததாக தகவல் வெளியாகியது.

ஒரு வாரத்திற்கு முன் விடுமுறையில் சென்றிருந்த அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதை சென்னை பெருநகர காவல்துறை தற்போது மறுத்து விளக்கம் அளித்துள்ளது. அதில், முதலமைச்சர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு கொரோனா என வெளியான செய்தி உண்மையில்லை. அவர் முதலமைச்சரின் இல்லப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. கீரின்வேஸ் சாலையில் கடந்த 30-ஆம் தேதி வரை பணியில் இருந்த பெண் காவலர் கடந்த 6-ஆம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.

அவர் முதலமைச்சரின் இல்லப் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடவில்லை. எனவே பெண் காவலருக்கு கொரோனா தொற்று என வெளியான செய்தியில் உண்மையில்லை. இவ்வாறு காவல்துறை சார்பாக கூறப்பட்டுள்ளது.

click me!