கேன் வாட்டரில் நாம் குடித்துக் கொண்டிருப்பது சாக்கடை நீர்..? ஆராய்ந்தறிய வேண்டிய அவசிய உண்மை..!

By Thiraviaraj RMFirst Published Jun 24, 2019, 1:34 PM IST
Highlights

தண்ணீர் விற்பனை தங்கத்தை விட லாபம் தரும் வியாபாரமாக மாறிவிட்டது. பணம் போனாலும் பரவாயில்லை ஆரோக்கியம் முக்கியம் என கேன் வாட்டருக்காக பணத்தை தண்ணீராய் செலவழித்து வருகிறார்கள் மக்கள். 

தண்ணீர் விற்பனை தங்கத்தை விட லாபம் தரும் வியாபாரமாக மாறிவிட்டது. பணம் போனாலும் பரவாயில்லை ஆரோக்கியம் முக்கியம் என கேன் வாட்டருக்காக பணத்தை தண்ணீராய் செலவழித்து வருகிறார்கள் மக்கள். ஆனால் அப்படி நாம் நம்பி வாங்கிக் குடிக்கும் தண்ணீர் உண்மையில் தூய்மையானதா என்பதை ஆராய வேண்டியது நம் அடிப்படை கடமை. 

தண்ணீர் பஞ்சம் தமிழகத்தை ஆட்டிப்படைத்து வரும் நேரத்தில் ஒரு சிலர் இதனைப் பயன்படுத்தி பெரும் பணத்தை சுருட்டி வருகிறார்கள். கோடை வெயில் இன்னும் குறையாத நிலையில் சிறிய மளிகைக் கடை முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை கேன் குடிநீர் விற்பனை பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. எனினும் பல இடங்களில் முறையாக சுத்திகரிக்கப்படாத மற்றும் குழாய்களிலும், நேரடியாக லாரிகளிலும் தண்ணீரைப் பிடித்து வடிகட்டி கேன்களின் அடைத்து விற்பதாக புகார் எழுந்து வருகிறது. 

தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடிநீர் கேன்கள் விற்பனையாகிறது. அதில் பாதிக்குப்பாதி சுகாதாரமற்ற முறையில் போலியான நிறுவனங்களின் பெயரில் குடிநீர் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஒருவர், ’’பேருந்து நிலையங்கள், மளிகைக் கடைகள், வணிக வளாகங்கள் என பல இடங்களிலும் தினமும் சோதனை மேற்கொண்டு அதிகளவில் குடிநீர் பாட்டில்கள், கேன்களை பறிமுதல் செய்து வருகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை குறித்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு நடத்தி வருவதுடன் அவர்களை அழைத்து தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறோம். 

பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் கேன்கள், பாட்டில்கள் சுத்தமாக இருக்க வேண்டும். குடிநீர் கேன்களின் லேபிள்களில் உற்பத்தி செய்யப்படும் தேதியை உற்பத்தியாளர்கள் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். உற்பத்தி செய்யப்படும் இடத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.

முக்கியமாக ஐ.எஸ்.ஐ தரச்சான்று, எப்.எஸ்.எஸ்.ஐ லைசென்ஸ், ஆழ்துளை கிணறுகள் வைத்திருந்தால் அதற்கான சான்று, எவ்வளவு தண்ணீர் உற்பத்தி செய்ய தடை இல்லா சான்று வாங்கப்பட்டுள்ளதோ அதை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். இதேபோல், ஒரு கேனில் ஒரு ஸ்டிக்கர் மட்டுமே இருக்க வேண்டும். குறிப்பாக, எந்த நிறுவனத்தின் தண்ணீர் கேனில் நிரப்பப்படுகிறதோ அந்த நிறுவனத்தின் ஸ்டிக்கர் மட்டுமே அதில் இருக்க வேண்டும்.

20 லிட்டர் கேனில் லேசர் பிரிண்டிங்கில் உற்பத்தி தேதி கண்டிப்பாக இருக்க வேண்டும். தண்ணீர் கேன் கொண்டுபோய் கொடுப்பவர்கள் கண்டிப்பாக உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்கிற விதிமுறைகள் இருக்கின்றன. இதேபோல் தண்ணீர் எடுத்து செல்பவர்களும், விற்பனை செய்பவர்களும் பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உற்பத்தியாளர்கள் எடுத்துக்கூற வேண்டும். இதில் எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்படாவிட்டால் உடனடியாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து 94440 42322 என்ற மாநில தலைமை அலுவலக வாட்ஸ்-அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். போலியாக செயல்படும் நிறுவனங்கள் குறித்தும் இந்த எண்களுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தண்ணீர் கேன்களை வாங்கும் போது அதில் சான்றிதழ் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். இதுகுறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தண்ணீர் கேன்களை வாங்கும் போது அதில் சான்றிதழ் உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்’’ எனக் கூறுகின்றனர்.

click me!