கோயில் பணியாளர்கள் 500 பேர் அதிரடி டிஸ்மிஸ்… - அறநிலையத்துறையில் பரபரப்பு

By Asianet TamilFirst Published Jul 25, 2019, 1:06 AM IST
Highlights

கமிஷனர் எச்சரிக்கையை தொடர்ந்து ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்கள் 500 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர். இது அறநிலையத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமிஷனர் எச்சரிக்கையை தொடர்ந்து ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்கள் 500 பேரை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளனர். இது அறநிலையத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களில் இணை ஆணையர், உதவி ஆணையர், செயல் அலுவலர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அதிகாரிகளின் கீழ் மேலாளர், கண்காணிப்பாளர், தலைமை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட நிலையிலான அதிகாரிகள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர்.

இந்த நிலையில் எழுத்தர், கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகள் பலர் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடங்களில் தகுதிக்கேற்ப டிஎன்பிஎஸ்சி மூலம் புதிதாக பணியாளர்களை நியமிக்க அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்ைக எடுத்து இருக்க வேண்டும்.

 ஆனால், ஆணையர் அலுவலகம் உட்பட பல கோயில்களில் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர், மேலாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஓய்வு பெற்ற பணியாளர்களால் தான் கோயில்களில் முறைகேடு நடப்பதாக புகார் வருகிறது. ஆனால், இந்த பணியாளர்கள் ஓய்வு பெற்றதால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்ைக எடுக்க முடியாது என்பதால் பல கோயில்களில் செயல் அலுவலர்கள் சிலர் ஓய்வு பெற்ற பணியாளர்களை பணி அமர்த்துவதாக கூறப்படுகிறது.

இது போன்று பெரும்பாலான கோயில்களில் அறநிலையத்துறை கமிஷனரின் ஒப்புதல் இல்லாமல் பணிபுரிந்து வரும் இது போன்ற பணியாளர்களால் தான் அறநிலையத்துறை மீது குற்றச்சாட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் சமீபகாலமாக அறநிலையத்துறைக்கு இது தொடர்பாக ஏராளமான புகார் வந்ததையடுத்து கமிஷனர் பணீந்திரரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்களை பணியமர்த்தினால் ெசயல் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதை தொடர்ந்து திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயில், பாம்பன்சுவாமி கோயில் உட்பட சென்னை மண்டலத்தில் மட்டும் 10 கோயில்களில் பணிபுரிந்து வந்த 15 ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதே போன்று தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் நீக்கம் செய்யப்படாமல் முக்கிய பொறுப்புகளில் பணிபுரிந்து வருகின்றனர் என்று அறநிலையத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

click me!