தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டங்கள் கோலாகலம்..! வண்ண வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை..!

By Manikandan S R SFirst Published Nov 1, 2019, 12:50 PM IST
Highlights

இன்று தமிழ்நாடு நாள் மாநிலம் முழுவதும் முதல்முறையாக கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக சட்டப்பேரவை வளாகம் மற்றும் நுழைவாயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா நடைபெறுகிறது.

ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் இருந்து கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மொழிவாரி அடிப்படையில் 1956 ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி பிரிக்கப்பட்டன. இதற்காக தியாகி சங்கரலிங்கனார் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்திருந்தார்.  ஒவ்வொரு வருடமும் இந்த நாளை அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதே போன்று தமிழ்நாட்டிலும் கொண்டாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக தமிழ் உணர்வாளர்களால் அரசிடம் வைக்கப்பட்டிருந்தது.

இதை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 1 ம் தேதி தமிழ்நாடு நாளாக கடைபிடிக்கபடும் என்று சமீபத்தில் உத்தரவிட்டார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1 ம் தேதி இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையையும் தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கு 10 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று தமிழ்நாடு நாள் மாநிலம் முழுவதும் முதல்முறையாக கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழக சட்டப்பேரவை வளாகம் மற்றும் நுழைவாயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம், இளையோர் அரங்கம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற இருக்கிறது. பள்ளி,கல்லூரிகளிலும் தமிழ்நாடு நாள் விழாவை சிறப்பாக கொண்டாட அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் புதுவை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றதை நினைவு கூறும் வகையில் புதுச்சேரியில் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

click me!