இந்தியாவிலேயே இதைச் செய்தது திமுக அரசு தான்…. ஸ்டாலின் வெளியிட்ட் வீடியோவால் உடன்பிறப்புகள் உற்சாகம்..!

By manimegalai aFirst Published Oct 3, 2021, 1:25 PM IST
Highlights

உத்தரவிடுங்கள், உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். உங்களில் ஒருவனாக, உங்கள் சகோதரனாக, கலைஞரின் மகனாக, கடமை ஒன்றை மட்டுமே வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட ஒருவனாகச் செயல்படும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

உத்தரவிடுங்கள், உங்களுக்காக எந்நாளும் உழைப்போம். உங்களில் ஒருவனாக, உங்கள் சகோதரனாக, கலைஞரின் மகனாக, கடமை ஒன்றை மட்டுமே வாழ்க்கை லட்சியமாகக் கொண்ட ஒருவனாகச் செயல்படும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

 

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் களம் இறுதிகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் அதிமுக-வுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளையுடன் பிரச்சாரம் ஓய்வதால், திமுக வேட்பாளர்களுக்காக அமைச்சர்கள் பரப்புரை செய்து வருகின்றனர். இதுவரை பிர்ச்சார களத்திற்கு வராத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்ந்திட திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் முதலமைச்சர் தெரிவித்துள்ளதாவது. உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வாக்களிக்கத் தயாராக இருக்கும் மக்களுக்கு வணக்கம்.சட்டப்பேரவைத் தேர்தலில் நல்லாட்சி மலர வேண்டும் என்று திமுக கூட்டணிக்கு வாக்களித்தீர்கள். உள்ளாட்சியிலும் நல்லாட்சி மலர திமுகவிற்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவளிக்க வேண்டும்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் வாக்குகளை வழங்கினீர்கள். உங்களால் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை நாள்தோறும் உங்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். பெண்களுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம், 14 வகையான மளிகைப் பொருட்கள், ஆவின் பால் விலை ரூ.3 குறைப்பு, பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு, தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரத்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்பட்ட ஐந்து சவரனுக்கு உட்பட்ட தங்க நகைக் கடன் தள்ளுபடி, ஊரகப் பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராமப் பகுதிகளை மேம்படுத்த ’நமக்கு நாமே’ திட்டத்தைப் புதுப்பிக்க உள்ளோம், ’வரும்முன் காப்போம் திட்டம்’, ’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் பொங்கலுக்குள் ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டம் என்பன போன்ற ஏராளமான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆட்சிக்கு வந்த நான்கே மாதத்தில் இதைச் செய்து கொடுத்திருக்கிறோம் என்பதுதான் திமுகவின் தனித்தன்மை. பத்தாண்டு காலம் ஒரு கட்சி ஆட்சியில் இருந்தது. ஆனால் அவர்கள் இரண்டு தேர்தலின்போதும் கொடுத்த வாக்குறுதியை 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. ஆனால் நாங்கள் அளித்த 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம். அதுவும் 4 மாதங்களில் நிறைவேற்றிய அரசு இந்தியாவிலேயே திமுக அரசாக மட்டும்தான் இருக்கமுடியும். இத்தகைய விவேகமும் பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட அரசுக்கு மக்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கடைசி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோவால் திமுக உடன்பிறப்புகள், வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். முதல்வரின் வீடியோ உள்ளாட்சியில் வெற்றியை பெற்றுத்தரும் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

click me!