மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான் என சினிமாக்களில் அடையாளப்படுத்துகிறார்கள்… முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை!

By manimegalai aFirst Published Dec 23, 2021, 12:09 PM IST
Highlights

மஞ்சப்பை வைத்திருப்பதது அவமானம் அல்ல. சுற்றுச்சூழலை காப்போரின் அடையாளம் தான் மஞ்சப்பை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மஞ்சப்பை வைத்திருப்பதது அவமானம் அல்ல. சுற்றுச்சூழலை காப்போரின் அடையாளம் தான் மஞ்சப்பை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சர்வதேச காலநிலை மாற்றத்திற்கு பிளாஸ்டிக் பைகள் மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. கடலில் டன் கணக்கில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து, தட்ப வெப்ப நிலையும் மாறுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை கொரோனா பரவல் காரணமாக முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் திமுக அரசு புதிதாக பொறுப்பேற்ற பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த வகையில் மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை கைவிட்டு மீண்டும் துணிப் பைகளுக்கு திரும்பும் வகையில், மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு திட்டத்தை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கும் விழிப்புணர்வுகளையும், அதற்கு மாற்றான துணி பைகளை உபயோகிக்கும் பழக்கத்தையும் பொதுமக்கள் இடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் மஞ்சப்பை பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் மீண்டும் மஞ்சப்பை பரப்புரைக்கான நிகழ்ச்சியை சுற்ற்ச்சூழல், காலவிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஏற்பாடு செய்திருந்தது. சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கி வைத்தார். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாரம்பரிய பொருட்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை எம்.பி தயாநிதிமாறன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிளாஸ்டிக் நாகரீகம், மஞ்சப்பை கேவலம் எனும் சூழல் உள்ளது. மஞ்சப்பை வைத்திருந்தால் பட்டிக்காட்டான், கிராமத்தான் என்று சினிமாக்களில் அடையாளப்படுத்தும் நிலை உள்ளது என்று முதலமைச்சர் கவலையை வெளிப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், வணிக போட்டி காரணமாக விதவிதமான பிளஸ்டிக் பை விற்பனை செய்யப்படுகின்றன. வளரச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுற்றுச்சூழலுக்கும் தயவேண்டியது அவசியம். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் பிளாஸ்டிக்  பைகள் நிலம், நீர், காற்று என  அனைத்திற்கும் கேடு விளைவிக்கிறது. சுற்றுச்சுழலை மாசு படுத்துகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. பிளாஸ்டிக் பைகள் எரிக்கப்படும் போது அது காற்றில் கலந்து காற்று நஞ்சாகிறது. அதை சுவாசிக்கும் மனிதர்களுக்கு நுரையீரல் பாதிக்கிறது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எரியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியும், விற்பனையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்கு மின் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பை அரசாங்கம் மட்டும் நினைத்தால்  செயல்படுத்த முடியாது, மக்களும் இணைந்து செயல்பட வேண்டும். பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் நிராகரிக்க வேண்டும். மஞ்சப்பை என்பது அவமனாம் அல்ல. சுற்றுச்சூழலை காப்போரின் அடையாளம் தான் மஞ்சப்பை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை இன்று மாலை 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிட்டு, அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

click me!