பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்த 28 அவதூறு வழக்குகள் ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

By vinoth kumarFirst Published May 21, 2020, 12:06 PM IST
Highlights

டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர், இந்து, நக்கீரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்த 28 அவதூறு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர், இந்து, நக்கீரன் உள்ளிட்ட பத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்த 28 அவதூறு வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பேசியது குறித்து அவ்வப்போது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தமிழகம் முழுதும் தொடர்ந்து வருகிறது. தலைவர்களின் கருத்துகளை வெளியிட்டு தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தினமலர், முரசொலி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நக்கீரன் ஆகியவற்றின் மீதும் அவற்றின் ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, 2012ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி முரசொலி நாளிதழ் மீது 20 வழக்குகளும், டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, நக்கீரன் மற்றும் தினமலர் மீது தலா 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.

தமிழக அரசின் அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் தொடர்ந்த வழக்குகள், மக்கள் பிரதிநிதிகள் வழக்கு என்பதால் தனியாக பிரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணை நடைபெற்று நிலுவையில் உள்ளது. 

 இந்த சூழலில் தற்போது பத்திரிக்கை நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் ஏற்கனவே நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது முரசொலி நாளிதழ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமேரசன், தலைவர்களின் கருத்துகளை பதிவு செய்யும் விதமாக பத்திரிக்கையில் செய்தி வெளியிடும்போது, அந்த கருத்துகளின் அடிப்படையில் தங்கள் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதாக தெரிவித்தார்.

மேலும், இது பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அவதூறு தண்டனை சட்டத்தை இந்த அரசும் கடைபிடித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாக செய்திகள் போடபட்டால் அவதூறு வழக்கு தொடரப்படுகிறது என்றும் வாதிட்டார்.

குறிப்பாக நக்கீரன் தரப்பில் ஆஜரான பி.டி.பெருமாள் அவர்கள் தனிநபர் மீது விமர்சனம் செய்து கருத்துகளை வெளியிட்டாலும், அரசின் தலைமையில் தான் இந்த அவதூறு வழக்கு தொடரப்படுகிறது என்பதால் மக்களின் வரிப்பணம் தான் வீணாக செலவிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்து குழுமம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அதிகளவில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதாக குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், அனைத்து வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பாடாமல் ஒத்தி வைத்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அப்துல் குத்தூஸ் டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர், இந்து, நக்கீரன், முரசொலி உள்ளிட்ட நாளிதழ்களில் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

click me!