2 நாட்கள் பயணமாக தமிழகத்தில் இருக்கும் மாமல்லபுரம் வரும் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டில் இருக்கும் மாமல்லபுரத்திற்கு வருகின்றனர். அங்கு இரு நாட்டு உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற இருக்கின்றன.
இதற்காக சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலைகள், முக்கிய இடங்கள் ஆகியவை தூய்மைபடுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் ஜொலிக்கின்றன.
இந்த நிலையில் சீன அதிபரை வரவேற்கும் விதமாக சென்னையில் இருக்கும் ஒரு பள்ளியில் சீனாவின் தாய்மொழியில் அவரது பெயர் வடிவில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி சீனாவின் தாய்மொழியான மாண்டரின் மொழியில் சீன அதிபரின் பெயரான ஜின்பிங் வடிவில் 2000 மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும் ஜின்பிங் முகமூடி மற்றும் சிவப்பு உடையை அணிந்து கொண்டு மாணவர்கள் உற்சாகமாக காட்சியளித்தனர்.