நளினி ஒரு துரோகி! பிரதமரை படுகொலை செய்த கொலைகாரி! இனியாவது பொய் பேசாமல் திருந்து.. ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி விளாசல்

By vinoth kumarFirst Published Nov 16, 2022, 10:45 AM IST
Highlights

நளினி இப்படி கூறுவது பொய். குண்டுவெடிப்பின்போது, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தான் இல்லை என்றும், இந்திராகாந்தி சிலை அருகில் இருந்ததாகவும்,  நளினியும், சுபாவும் விலை உயர்ந்த மைசூர் சில்க் புடவையில் வந்தனர். ஆனால், நளினி நான் அங்கு இல்லை என்று கூறிவருகிறார். 

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலையான நளினி, ஊடகங்களிடம் பொய்யான தகல்களைக் கூறுகிறார். இனியாவது திருந்தி வாழ வேண்டும் என ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி அனுசுயா டெய்சி கூறியுள்ளார். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. அதேபோல், நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இதற்கு திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகள், நிரபராதிகள் இல்லை என விமர்சித்ததிருந்தார்.

இதையும் படிங்க;- குற்றவாளிகளை கொண்டாட கூடாது.. எழுவர் விடுதலை குறித்து பாஜகவை சீண்டிய எம்.பி ஜோதிமணி

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி அனுசுயா டெய்சி  சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ராஜூவ் காந்தி படுகொலையின்போது நான் பாதுகாப்புப் பணியிலிருந்தேன். அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் எனது கை விரல்கள் துண்டிக்கப்பட்டு தீக்காயம் ஏற்பட்டது. குற்றவாளிகளை நேரில் பார்த்தது நான் அடையாளம் காட்டினேன். அதனால், நளினி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வந்த பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேரும் உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது. 

விடுதலையாகி வெளியே வந்த நளினி ஊடகத்துக்கு நிறைய பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார். என்னை சம்பவத்தின்போது பார்க்கவில்லை என்று கூறுகிறார்.  அடையாள அணிவகுப்பின்போது போலீஸ் உதவியுடன்தான் நான் அவரை அடையாளம் காட்டியதாக கூறியுள்ளார். நளினி இப்படி கூறுவது பொய். குண்டுவெடிப்பின்போது, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தான் இல்லை என்றும், இந்திராகாந்தி சிலை அருகில் இருந்ததாகவும்,  நளினியும், சுபாவும் விலை உயர்ந்த மைசூர் சில்க் புடவையில் வந்தனர். ஆனால், நளினி நான் அங்கு இல்லை என்று கூறிவருகிறார். 

விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்துக்குள் வழிகாட்டி, அடைக்கலம் கொடுத்த நளினிதான் முதல் குற்றவாளி. நளினி உதவியின்றி ராஜீவ் காந்தியை கொன்று இருக்க முடியாது.  இன்று பூ வைத்துக்கொண்டு நளினி வருகிறார். ஆனால், எத்தனை பெண்களின் தாலியை அறுத்திருக்கிறார்? காந்தி குடும்பம் ஒன்றுதான் நாட்டுக்காக உயிரைக் கொடுக்கிறது. நமது சட்டம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறது. நளினி நம் நாட்டுக்கே ஒரு துரோகி, முன்னாள் பிரதமரை கொன்ற கொலைகாரி, பொய் பேசிக்கொண்டு திரியாதே. நீயாவது திருந்து வாழ். சோனியா காந்தி நளினியை மன்னித்துவிட்டேன் என்று கூறிய வார்த்தை நீதிபதிகளின் காதுகளில் கேட்டதால்தான் இவர்கள் விடுதலை ஆனார்கள் என அனுசுயா டெய்சி ஆவேசமாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  கொலையாளிகள் விடுதலை நல்லதல்ல! ராஜீவ் கொலையாளிக்கு ஒரு நீதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு நீதியா- கே எஸ்.அழகிரி ஆவேசம்

click me!