புழல் சிறையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.
புழல் சிறையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. அரசு தரப்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் கொஞ்சம் கூட அசராமல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 11,313 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 154-ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13,362 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 113-ஆக உள்ளது.
இந்நிலையில், இதுவரை பொதுமக்கள் மற்றும் போலீசார், கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் புழல் மத்திய சிறையிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று 30 கைதிகள் மற்றும் ஒரு தூய்மைப் பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 15 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அனைத்து கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அத்துடன், புழல் சிறை வளாகத்தில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவ வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.