முற்றிலுமாக பொது போக்குவரத்து நிறுத்தம்..? முதல்வருக்கு மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 29, 2020, 3:45 PM IST
Highlights

பொது போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது என மருத்துவ நிபுணர் குழு தகவல் தெரிவித்துள்ளது.

பொது போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது என மருத்துவ நிபுணர் குழு தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து, பாதிப்பு அதிகரித்தாலும் 5ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதுடன் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. 

இதனையடுத்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களான மதுரை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வந்தது. இதனால், பொது போக்குவரத்து முறையை ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறவித்தார். மேலும், அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டுமே அரசு பேருந்துகளை இயக்கவும், கொரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லையை மூடவும் அரசு முடிவு எடுத்தார். 

இந்நிலையில், ஊரடங்கு தொடர்பாக ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுத்து வந்த நிலையில்,  5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவக் குழுவினர் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை துண்டிப்பதே அவசியம். ஊரடங்கு என்பது கொசுவை கொல்ல கோடாரியை பயன்படுத்துவது போன்றது என்றும், ஊரடங்கு என்பது பெரிய ஆயுதம், தற்போது அது தேவையில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். எதாவது ஒரு அறிகுறி இருந்தால் கூட மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என கூறியுள்ளனர். 

மேலும், பொது போக்குவரத்து காரணமாக சில மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது, ஆனால், பொது போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்ய முதல்வருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ நிபுணர் குழு கூறியுள்ளனர்.

click me!