மாணவர்களை அரைநிர்வாணப்படுத்தி அடித்து உதை - 2 பேர் மீது வழக்கு பதிவு!

By manimegalai aFirst Published Jul 25, 2019, 2:32 PM IST
Highlights

பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் சக மாணவனை அரைநிர்வாணமாக்கி அடித்து உதைத்த சம்பவம் குறித்த படம் வெளியாகி வைரலானது. இதனால் பொதுமக்கள், மாணவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.
 

பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் சக மாணவனை அரைநிர்வாணமாக்கி அடித்து உதைத்த சம்பவம் குறித்த படம் வெளியாகி வைரலானது. இதனால் பொதுமக்கள், மாணவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தள்ளனர்.

சென்னையில் குறிப்பிட்ட பஸ், ரயில் ரூட்களில் யார் தலைவராக இருப்பது என்பது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புது கல்லூரி மற்றும் நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுவது வழக்கம்.

இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு போலீசார் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி, அந்தந்த கல்லூரி மாணவர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். எனினும், அவர்களின் கண்காணிப்பை மீறி, கல்லூரி மாணவர்களின் அடிதடி மோதல்கள் நடைபெறுவதால் இதனை தடுக்க போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் குறிப்பிட்ட பஸ் வழித்தடங்களில் யார் தலைவராக இருப்பது என்பதில் வடசென்னை மற்றும் பூந்தமல்லி பகுதியை சேர்ந்த 2 பிரிவு மாணவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் காலை கல்லூரி வளாகத்துக்குள் அடிதடி நடைபெற்றது.

இதையடுத்து வடசென்னையை சேர்ந்த ஒரு சில மாணவர்களை மற்றொரு பிரிவினர் அரைநிர்வாணப்படுத்தி, ஒரு மறைவான இடத்தில் வைத்து, அவர்களை அடித்து துன்புறுத்தி, சம்பந்தப்பட்ட ரூட்டில் இனி வரமாட்டோம் என மிரட்டி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
தகவலறிந்ததும் வடசென்னை பிரிவை சேர்ந்த ஒரு சில மாணவர்கள் ஆத்திரமடைந்தனர். இந்நிலையில், பூந்தமல்லியில் வசிக்கும் மற்றொரு பிரிவை சேர்ந்த 7 பேர் நேற்று முன்தினம் மதியம் கல்லூரி முடிந்ததும். திருவேற்காடு செல்லும் (தடம் எண் 29 இ) மாநகர பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பைக்குகளில் அரிவாளுடன் விரட்டி சென்று, அரும்பாக்கம் மெகா மார்ட் ஷோரூம் அருகே மடக்கி பிடித்தனர். அங்கு டிரைவரிடம் அரிவாளை காட்டி பஸ்சை நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதில் பயந்துபோன டிரைவர், சாலையின் நடுவே பேருந்தை நிறுத்திவிட்டார்.

இதையடுத்து அக்கும்பல் பஸ்சில் இருக்கும் 7 மாணவர்களையும் கீழே இறங்கும்படி அரிவாளை காட்டி மிரட்டினர். அவர்கள் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பி செல்ல முயற்சித்தனர். இதில் ஆத்திரமான அக்கும்பல், காலையில் தாக்குதலில் ஈடுபட்ட 7 மாணவர்களையும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியே போர்க்களமானது. மக்கள் பீதியில் ஆழ்ந்து அதிர்ச்சியில் உறைந்தனர். நடு ரோட்டில் பஸ் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அரிவாள் தாக்குதல் நடத்தியதில் பச்சையப்பன் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படிக்கும் குன்றத்தூரை சேர்ந்த வசந்தகுமார் (20) உள்ளிட்ட 7 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்திய மாணவர்கள் பைக்குகளில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு தலையில் வெட்டுக்காயம் அடைந்த வசந்தகுமாரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், மற்ற 6 மாணவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பின்னர் அதில் பதிவான வாகனங்களின் பதிவெண்களை வைத்து அக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் பெரியபாளைத்தை சேர்ந்த மதன் (24), ஆரணி பகுதியை சேர்ந்த ஸ்ருதி (19) ஆகிய 2 மாணவர்களை கைது செய்தனர். அவர்களது 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்டவர்களிடம் தப்பி சென்ற மேலும் 6 மாணவர்கள் யார்? யார்? என விசாரித்து, அம்மாணவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பிடிபட்ட மாணவர்களை வாகனத்தை சேதப்படுத்தல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல், கொலை முயற்சி, கொலை மிரட்டல், கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் தாக்குதல் போன்ற ஐந்து பிரிவுகளின் கீழ் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!