சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமான இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். நீண்ட நேரமாகியும் கோளாறு சரி செய்யப்படாததால் பயணிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அவர்களை மாற்று விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமான இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். நீண்ட நேரமாகியும் கோளாறு சரி செய்யப்படாததால் பயணிகள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு அவர்களை மாற்று விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு நேற்று முன்தினம் இரவு 8.50 மணியளவில் தனியார் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 177 பயணிகள், 6 ஊழியர்கள் என 183 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் வேகமாக சென்றபோது விமான இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தினார். உடனடியாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து 2 இழுவை வாகனங்கள் இழுத்து கொண்டு வந்து, விமானம் புறப்பட்ட இடத்திலேயே நிறுத்தப்பட்டது. பொறியாளர் குழுவினர் உள்ளே சென்று இயந்திரங்களை சோதித்தனர். நீண்ட நேரம் சரிசெய்யப்படாததால் பயணிகள், ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு, விமானநிலைய ஓய்வறையில் அமரவைக்கப்பட்டனர். அவர்களுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. நள்ளிரவை கடந்தும் விமானத்தில் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், அதிகாரிகளுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள், ‘உங்களை மாற்று விமானம் மூலம் அனுப்பி வைக்கிறோம்' என உறுதி கூறினர். இதன்பிறகு அதிகாலை 1.20 மணியளவில், சுமார் 4 மணி நேர தாமதமாக கொச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.