ஆன்லைன் சூதாட்டத்திற்கு மகன் அடிமையானதால் பறிபோன தாயின் உயிர்.. சென்னையில் நடந்த சோகம்..!

By vinoth kumarFirst Published Feb 8, 2023, 11:43 AM IST
Highlights

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்த மகனால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்த மகனால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (52). இவரது, மனைவி செல்வி (48). இவர்களுக்கு தேவேந்திரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் தேவேந்திரன் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கம்பெனி பணத்தை கையாடல் செய்து ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி ரூ.3.87 லட்சம் இழந்துள்ளார். இதனால், கம்பெனி நிர்வாகம் தேவேந்திரனை வேலையில் இருந்து நீக்கிவிட்டு கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணத்தை கையாடல் செய்ததாக புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், ஒரு வாரத்தில் பணத்தை கட்டுவதாக தேவேந்திரன் மற்றும் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் உறுதியளித்துள்ளனர். இந்நிலையில், பணத்தை கட்ட முடியாததால் தேவேந்திரன் திடீரென தலைமறைவாகியுள்ளார். இதனால், அவரது தாய் செல்வி அவமானம் மற்றும் மனவேதனையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு,  ஓடிவந்து அக்கம் பக்கத்தினர் காப்பாற்றுவதற்குள் செல்வி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

click me!