
காதலி இறந்த துக்கம் தாங்காமல் இளைஞர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் டீ கல்லுப்பட்டியை சேர்ந்தவர் பிரபுகாந்த் (21). இவர் தீபா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் திடீரென இறந்துவிட்டார். இதனால், பிரபு காந்த் கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் தனியாக இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன், சென்னை வந்த பிரபுகாந்த், பெரியமேடு பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
இந்நிலையில், பிரபுகாந்த் தனது வாட்ஸ்அப் மூலம், இதுவரை எனக்கு ஆதரவாக இருந்த நண்பர்களுக்கு நன்றி, அப்பா மற்றும் அத்தை என்னை மன்னித்து விடுங்கள், பார்த்துக்கோங்க, யாரையாவது நான் கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள், எல்லோரும் சந்தோஷமாக இருங்கள், என்று வீடியோ அனுப்பியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் லட்சுமன் மற்றும் அஜித்குமார் ஆகியோர் பிரபுகாந்திற்கு போன் செய்துள்ளனர்.
அப்போது அவர், எனது தீபா இல்லாமல் எனக்கு வாழ பிடிக்கவில்லை, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதுபற்றி அவர்கள் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விடுதியின் கதவை உடைத்து பார்த்த போது பிரபுகாந்த் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.