மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! முதல்வர் பழனிச்சாமி அதிரடி..!

By Manikandan S R SFirst Published May 17, 2020, 3:00 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பரவுதல் உச்சத்தில் இருந்து வருவதால் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. மார்ச் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வந்ததால் மே 3ம் தேதி முதல் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. எனினும் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு மாறுபட்ட கோணத்தில் மேலும் தொடரும் என்று பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவுதல் உச்சத்தில் இருந்து வருவதால் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் ஊரடங்கின் போது தற்போதைய தளர்வுகளுடன் மேலும் சிலவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தின் பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் 25 மாவட்டங்களில் அவசர தேவைகளுக்கான போக்குவரத்து இயங்க பாஸ் பெற தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே பொதுமக்கள் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் தொடர்ந்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கும் அரசு முகக் கவசங்களை வெளியிடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது. பாதிப்புகள் குறைய குறைய ஊரடங்கு நடைமுறைகளில் மேலும் தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!