நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்...? அதிரடிகாட்டும் தேர்தல் ஆணையம்..!

By vinoth kumarFirst Published Sep 26, 2019, 1:48 PM IST
Highlights

நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. இதன் பிறகு பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வந்தது. தேர்தல் நடத்தப்படாததால் நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் நெருக்கடியால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டது.

இதனிடையே, சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைக்கும் பணி அக்டோபர் 15-ல் முடிவடையும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கிராம பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் இப்போதே தயாராகி வருகின்றனர். 

click me!