அரசு நிலங்களை ஆக்கிரமித்து ஆட்டையை போட்ட அதிமுக முக்கிய பிரமுகர்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Sep 23, 2021, 2:59 PM IST
Highlights

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம், நீதிபதி வி.சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகம் சார்பில் இந்த வழக்கு குறித்து தங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையின் பல்கலைக்கழகம், அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பாக சர்வே மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம பொதுநல சங்கத்தின் தலைவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தங்கள் கிராம பகுதியில் தற்போது நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தங்களது கிராமத்தில் பாதாள சாக்கடை வசதி, ரேஷன் கடை கட்டிடம், சமுதாய நலக்கூடம் என எந்த ஒரு அரசு கட்டிடங்களும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம், அருகில் உள்ள கிராம நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து மின்சார துணை நிலையம், பாதை, மாணவ மாணவிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை கட்டமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அதேசமயம், அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி கடந்த 1949ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று குறிப்பிட்டுள்ள மனுதாரர், ஆனால் அந்த பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக விளையாட்டு மைதானம், நூலகம், ஆய்வக வசதிகள் கிடையாது என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிலங்களை பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொண்டனர். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாண சுந்தரம், நீதிபதி வி.சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பல்கலைக்கழகம் சார்பில் இந்த வழக்கு குறித்து தங்களுக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையின் பல்கலைக்கழகம், அரசு நிலங்களை ஆக்கிரமித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு உரிய நோட்டீஸ் அளிக்கப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து நிலங்களையும்  அளவீடு செய்து 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

click me!