கும்பகோணம் பள்ளி தீ விபத்து... 15ம் ஆண்டு நினைவு தினம்

By Asianet TamilFirst Published Jul 16, 2019, 11:24 AM IST
Highlights

கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தன. இதையொட்டி அந்த விபத்தின் 15ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் கடந்தும் ஆறாத ரணத்துடன் வாழ்கின்றனர் அக்குழந்தைகளின் பெற்றோர்கள்.

கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தன. இதையொட்டி அந்த விபத்தின் 15ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல ஆண்டுகள் கடந்தும் ஆறாத ரணத்துடன் வாழ்கின்றனர் அக்குழந்தைகளின் பெற்றோர்கள்.

கடந்த 2004ம் ஆண்டு இதேநாளில், தாய், தந்தையரின் விரலை பிடித்து கொண்டு, கும்பகோணத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளிக்கு சென்றன பால் மணம் மாறாத பிஞ்சு நெஞ்சங்கள். பள்ளியில் மதிய உணவு தயாரித்தபோது சமையலறையின் கூரையில் பற்றிய தீ, வகுப்பறைகளுக்கு மேல் போடப்பட்டிருந்த கீற்றுக் கூரைகளிலும் பரவியது.

தீயில் சிக்கிய குழந்தைகளின் அலறல் கேட்போரைக் கலங்கடித்தன. சாலையில் சென்றவர்கள், அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடியும் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை. அதில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. கரிக்கட்டைகளாகக் கிடந்த குழந்தைகளின் சடலங்களைக் கண்ட கதறல் கும்பகோணம் முழுவதும் எதிரொலித்தது.

இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதையொட்டி ஆண்டு தோறும் இதே நாளில் விழிகளில் பெருக்கெடுக்கும் கண்ணீருடன் பெற்றோரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துகின்றனர். ஒரு சிறு கவனக்குறைவு, சில நிமிடங்களில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்கு உதாரணமாகிப் போனது இந்த சம்பவம்.

click me!