தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி..! 621 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று..!

By Manikandan S R SFirst Published May 17, 2020, 8:02 AM IST
Highlights

தமிழகத்தில் அதிர்ச்சி தரும் செய்தியாக குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 621 குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. 

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா நோயின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று நேற்று 477 பேருக்கு புதியதாக உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 3,538 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 939 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 6,670 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வரும் நிலையில் 74 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழ்நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தலைநகர் சென்னை விளங்கிறது. அங்கு நாளுக்கு நாள் எகிறி வந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  நேற்று வெளியான அறிவிப்பின்படி சென்னையில் மட்டும் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் மொத்தமாக 6,271 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டிருக்கிறது. 

இதனிடையே தமிழகத்தில் அதிர்ச்சி தரும் செய்தியாக குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 621 குழந்தைகளை கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறது. அவர்களில் 338 ஆண் குழந்தைகளும் 283 பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்ட குழந்தைகள் அனைவரும் மருத்துவமனைகளில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும் நிலையில் பலர் மெல்ல மெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தொற்றில் இருந்து நீங்கிய மாவட்டங்களாக ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!