உலக அளவில் இந்தியாவில் ஒரு கல்வி நிலையம் கூட இல்லையா?... வேதனையுடன் வழக்கை முடித்து வைத்த நீதிபதி...!

By Kanimozhi PannerselvamFirst Published May 12, 2021, 1:13 PM IST
Highlights

உலகிலுள்ள சிறந்த 200 கல்வி நிலையங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிலையம் கூட இடம்பெறவில்லை என்று தனது கவலையை பதிவு செய்தார்.

சேலத்தில் உள்ள அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டும், அண்ணா பல்கலைகழகத்தில் இணைவு பெற்றும் செயல்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள தங்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அதிகாரம் எனப்படும் அட்டானமாஸ் அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரி கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், பல்கலைக்கழக மானிய குழுவிற்கும் அன்னபூர்ணா கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்தது.

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த அண்ணா பல்கலைக்கழகம், கடந்த 3 ஆண்டுகளில்  மாணவர் சேர்க்கை என்பது அனுமதிக்கப்பட்ட அளவில் 60 சதவீதம் இருக்க வேண்டும் என்பதற்கு மாறாக 30 சதவீதம் மட்டுமே உள்ளதை சுட்டிக்காட்டியும்,  மாணவர் தேர்ச்சி விகிதம் 70 சதவீதம் இருக்கவேண்டும் என்பதற்கு மாறாக 39.5 சதவீதம் மட்டுமே இருப்பதை சுட்டிக் காட்டியும் தன்னாட்சி அதிகாரம் கேட்கும் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி விண்ணப்பத்தை நிராகரித்தது. இந்த நிராகரிப்பு முடிவு குறித்த தகவலை பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் தெரியப்படுத்தியது.

இந்நிலையில் தங்கள் விண்ணப்பத்தை நிராகரித்த அண்ணா பல்கலைகழக உத்தரவை ரத்து செய்துவிட்டு, தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பான மனுவை பல்கலைக்கழக மானியக்குழு சுதந்திரமாக முடிவெடுக்க உத்தரவிட வேண்டும் என கல்வி நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்பொழுது அன்னப்பூர்னா கல்லூரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கந்தன் துரைசாமி, தேர்ச்சி சதவீதம் மற்றும் மாணவர்கள் சேர்க்கை அடிப்படையில்  விண்ணப்பத்தை நிராகரித்து தவறு என்றும், முழுமையான முடிவு எடுப்பதற்கு அதிகாரம் யுஜிசிக்கு மட்டுமே இருப்பதாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் தெளிவாக இருப்பதாக சுட்டிக்காட்டினார். அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயகுமார், கல்லூரிக்கு இணைப்பு வழங்கும் அதிகாரம் பெற்ற தங்களுக்கு அதன் செயல்பாடுகளைப் பொறுத்து, அட்டானமஸ் அதிகாரம் வழங்கலாமா வேண்டாமா என்று முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார்.


யுஜிசி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரபு மனோகர், அண்ணா பல்கலைக்கழகம் எடுத்த முடிவு தொடர்பான விவரங்களை பெற்றுள்ளதாகவும், அவற்றையும், கல்லூரி சமர்ப்பித்த ஆவணங்களையும் பொறுத்து இறுதி முடிவெடுக்க தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக தெரிவித்தார். அப்போது நீதிபதி சுரேஷ்குமார் குறுக்கிட்டு யாருக்கு அதிகாரம் இருப்பது என்பதில் தொடர்ந்து போட்டி நிலவுவதாக தெரிவித்தார். நாட்டிலேயே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் கல்வி சேவையில் சிறந்து விளங்குகின்ற அதேசமயம், உலகிலுள்ள சிறந்த 200 கல்வி நிலையங்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து ஒரு கல்வி நிலையம் கூட இடம்பெறவில்லை என்று தனது கவலையை பதிவு செய்தார். மேலும் தன்னாட்சி அதிகாரம் வழங்குவது தொடர்பான விண்ணப்பத்தை யுஜிசி இரண்டு மாதத்தில் சுதந்திரமாக செயல்பட்டு முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்துள்ளார்.
 

click me!