சென்னை வந்த விமானம்.. கழிப்பறையில் இருந்த 3 கோடி மதிப்புள்ள தங்கம்.. அதிர்ந்து போன அதிகாரிகள்.!

By Raghupati RFirst Published Mar 6, 2024, 11:34 AM IST
Highlights

அபுதாபி - சென்னை இண்டிகோ விமான கழிப்பறையில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

அபுதாபியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் கழிவறையில் மறைத்து வைத்திருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள சுமார் 4.5 கிலோ தங்கம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த விமானம் சர்வதேச விமானமாக வந்து பின்னர் சென்னையில் இருந்து ஹைதராபாத்க்கு உள்நாட்டு விமானமாக புறப்பட திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. விமானம் தரையிறங்கியதும், விமான ஊழியர்கள் விமானத்தை சுத்தம் செய்யத் தொடங்கினர். விமானத்தை சுத்தம் செய்யும் போது, விமானத்தின் கழிவறையில் மின் கம்பிகள் அடங்கிய கேபிள் பெட்டி லேசாக திறந்திருப்பதை விமான ஊழியர்கள் கவனித்தனர்.

உடனடியாக சென்னை விமான நிலைய மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சோதனையிட்டபோது, கேபிள் பாக்ஸ் பகுதிக்குள் கருப்பு நாடா சுற்றப்பட்ட பார்சல் கண்டெடுக்கப்பட்டது. அதில் கடத்தல் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள், 4.5 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் அடங்கிய பார்சலை பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் 3 கோடி ரூபாய்.  வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்க கட்டிகள் கடத்தலில் தனி நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானக் கழிப்பறையில் தங்கத்தை மறைத்து, விமான நிலைய ஊழியர்கள் மூலம் பெற நினைத்தாரா அல்லது ஹைதராபாத் விமான நிலையத்தில் உள்நாட்டுப் பயணியாகச் செல்லும் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்த வேறு யாராவது தங்கத்தை மீட்டுச் செல்ல நினைத்தார்கள? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இறங்கும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர்.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

click me!