குடியுரிமை சட்டத்தை எதிர்த்த ஜெர்மன் இளைஞர்..! நாட்டை விட்டு அதிரடியாக வெளியேற்றம்..!

By Manikandan S R SFirst Published Dec 24, 2019, 5:37 PM IST
Highlights

சென்னையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய ஜெர்மன் இளைஞர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

அண்மையில் இயற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து பல மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு பல்கலைக்கழகங்களின் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் இரண்டு நாட்களாக இரவு,பகல் பாராமல் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.  இதற்கு மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் கல்லூரிக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். சென்னை ஐ.ஐ.டியிலும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஜெர்மன் நாட்டைச் சேர்த்த ஒருவரும் கலந்து கொண்ட நிலையில் அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். ஜெர்மனைச் சேர்ந்த ஜேக்கப் லின் டென்தல் என்கிற மாணவர் சென்னை ஐ.ஐ.டியில் இயற்பியல் துறையில் படித்து வருகிறார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், 1933 முதல் 1945 வரை நாஜி ஜெர்மனியில் நடந்தது போல இந்தியாவில் தற்போது நடப்பதாக கையில் பதாகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து குடியேற்ற அதிகாரிகள் அவரை அழைத்து விசாரணை செய்தனர். விசா நடைமுறைகளை அவர் மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டனர். அதன்படி அவரது குடியேற்ற உரிமை ரத்து செய்யப்பட்டு அவர் ஜெர்மன் நாட்டுக்கு திருப்பி அனுப்பட்டார்.

click me!