அட என்னப்பா இப்படி சொல்லிட்டாங்க... அப்போ அடுத்த 5 நாளைக்கு தமிழகத்தின் நிலை இதுதானா?

By Kanimozhi PannerselvamFirst Published Jun 12, 2021, 3:43 PM IST
Highlights

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு (12.06.2021 முதல் 16.06.2021 வரை) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட  வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வடக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடித்து வருவதால், அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு (12.06.2021 முதல் 16.06.2021 வரை)  பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள ஓரிரு மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் முதல் ஜூன் 15 வரை வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும் அவ்வப்போது 65 கிலோமீட்டர்  வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும்,  ஜூன் 15ம் தேதி வரை தெற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஜூன் 16ம் தேதி வரை அரபிக்கடல், கேரளா, கர்நாடகாவை ஒட்டியுள்ள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட தேதிகளில்   மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

click me!