கலெக்டரை கண்டித்து திமுக எம்எல்ஏ சாலை மறியல்

By Asianet TamilFirst Published Aug 6, 2019, 3:10 AM IST
Highlights

மக்களின் பிரச்னையை பேச கலெக்டர் மறுத்ததல், திமுக எம்எல்ஏ திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையொட்டி அவரை போலீசார் கைது செய்தனர்.

மக்களின் பிரச்னையை பேச கலெக்டர் மறுத்ததல், திமுக எம்எல்ஏ திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையொட்டி அவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் புதிதாக எம்ஆர்ஐ ஸ்கேன் நிறுவுவதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹34.5 லட்சம் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடக்கின்றன. மேலும்₹11 லட்சம் இருந்தால் இந்த பணி நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி ஆலோசனை நடத்த, திமுக எம்எல்ஏ எழிலரசன், கலெக்டர் பொன்னையாவை அணுகியுள்ளார். அத்திவரதர் வைபவம் குறித்த கூட்டம் நடந்து கொண்டிருந்ததால், அவரை சந்திக்க அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து காத்திருந்த எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம்  - வந்தவாசி சாலைக்கு சென்று, அங்கு திடீர் மறியலில் ஈடுபட்டார். அவருடன், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் அபுசாலி, நகர பொருளாளர் வெங்கடேசன், தமிழ்ச்செல்வன், சந்துரு, காமராஜ், அருள்மணி, கந்தவேல் உள்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இதனால் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் சுமார் 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி கலைச்செல்வன், சமப்வ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏவிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. கலெக்டர் அல்லது வருவாய் அலுவலர் நேரில் வர வேண்டும் என கூறிய எம்எல்ஏ, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, எம்எல்ஏ எழிலரசனை, போலீசார் கைது செய்து, கீழம்பியில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றார்.

இதுகுறித்து எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் கூறுகையில், வாய்ந்த அத்திவரதர் வைபவம் நடக்கிறது. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நிலைமையை சமாளிக்க தனி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நான் பேசினேன். அதன் அடிப்படையில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்திவரதர் வைபவம் தொடர்பான கூட்டங்களுக்கு, தொகுதி மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் என்னை அழைப்பதில்லை. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி தொடங்க தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பணிகள் நடக்கிறது.

கட்டிட கட்டுமான பணி குறித்து ஆலோசிக்க கலெக்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மக்கள் பிரச்னை குறித்து பேச  கலெக்டரை தொடர்பு கொள்ள முடியாததால் சாலை மறியலில் ஈடுபட்டேன் என்றார்.

இதுபற்றி கலெக்டர் பொன்னையா கூறியதாவது, அத்திவரதர் வைபவம் நடக்கிறது. அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம், அதைத் தொடர்ந்து கலெக்டர்கள், எஸ்பிகளுக்கான மாநாடு தொடர்பான காணொளி காட்சி மூலம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தேன். கூட்டத்தை முடித்துவிட்டு எம்எல்ஏவை சந்திக்க தாமதம் ஆனது. அதற்குள் எம்எல்ஏ சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்.

அத்திவரதர் வைபவத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இதை சமாளிப்பதற்கான கூட்டம் நடந்துகொண்டிருந்ததால், உடனடியாக எம்எல்ஏவை சந்திக்க முடியாமல் போனது என்று தெரிவித்தார்.

click me!