தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக கட்டுக்குள் வந்த நிலையில், மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12,759ஆக அதிகரித்துள்ளது. 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 3000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, ராஜஸ்தானிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர்ந்து கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறி கொண்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. இவ்வளவுக்கும் கடந்த 3 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் கூட பாதிப்பு எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. இது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதை உணர்த்துகிறது.
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பது நம்பிக்கையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 200ஐ நெருங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் திருச்சியில் 32 பேர், சேலத்தில் 16 பேர், தேனியில் 18 என மொத்தம் 80 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில், இன்று வெறும் 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று அதிகபட்சமாக நாமக்கல்லில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ராமநாதபுரத்திலும் 3 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.