பாலியல் புகார் விவகாரம்... பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் 2.30 மணி நேரம் நடத்த விசாரணை நிறைவு..!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 2, 2021, 3:15 PM IST
Highlights

இந்நிலையில்  ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி கோமதி  சிலமணி நேரத்தில் மாற்றப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி, எஸ்.பி. முத்தரசி நியமிக்கப்பட்டார். 

தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை, சிறப்பு டிஜிபி அவர் மாவட்டத்திற்கு சென்ற போது மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அப்போது காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார். அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது.

சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியான ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 25ம் தேதி அன்று,  ராஜேஷ் தாஸ் மீதான குற்றத்தை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயசிரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும், பாலியல் புகாரை அடுத்து, இவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில்  ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க நியமிக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி ஏ.டி.எஸ்.பி கோமதி  சிலமணி நேரத்தில் மாற்றப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி, எஸ்.பி. முத்தரசி நியமிக்கப்பட்டார். இன்று ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணை தொடங்கியது. அவர் மீது புகாரளித்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம், சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி தலைமையிலான 6 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பெண் ஐபிஎஸ் அதிகாரி கூறிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. 

tags
click me!