கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் நிலை பரிதாபம் - ராமதாஸ் குற்றச்சாட்டு

By Asianet TamilFirst Published Jul 30, 2019, 11:18 AM IST
Highlights

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் பரிதாப நிலையில் இருப்பதால், ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று ராமதாஸ் குற்றம்சாட்டிள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் பரிதாப நிலையில் இருப்பதால், ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று ராமதாஸ் குற்றம்சாட்டிள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வீட்டு வசதி கிடைப்பதற்கு முக்கிய ஆதாரமாக திகழ்ந்த தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலைமை மிகவும் பரிதாபமானதாக மாறியிருக்கிறது. அந்த சங்கங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படாத நிலையில், அன்றாட செலவுகளுக்கு கூட நிதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 737 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 537 சங்கங்கள், அதாவது 73 சதவீத சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக 356 சங்கங்களில் பணியாற்றி வரும் 1014 ஊழியர்களுக்கு, அதிகபட்சம் கடந்த 6 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர்களுக்கான ஊதிய நிலுவை ரூ.55 கோடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் அவர்களின் குடும்பங்கள் கடுமையான வறுமையில் வாடி வருகின்றன. குழந்தைகளின் கல்வித் தேவைகளைக் கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் இந்த அவல நிலைக்கு காரணம், அவற்றின் மூலம் வழங்கப்பட்ட வீட்டுக் கடன் சரியாக வசூலிக்கப்படாததும், வேறு சில நிர்வாகக் குளறுபடிகளும் தான். வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராமல் முடங்கி விட்டதாலும், சங்கங்களின் வருவாய் முற்றிலுமாக குறைந்து விட்டதாலும் கூட்டுறவு சங்கங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.

கடந்த காலங்களில் வீட்டுக்கடன் வழங்குவதற்காக பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ரூ.5078 கோடி கடன் வாங்கிய கூட்டுறவு சங்கங்கள் அவற்றில் ரூ.438 கோடியைதிரும்ப செலுத்தவில்லை. இந்த கடனை திரும்ப செலுத்துவதுடன் கூட்டுறவு சங்கங்களுக்குகுறைந்த அளவில் மறு முதலீடும் வழங்கப்பட்டால் அவை மீண்டும் லாபத்தில் இயங்க தொடங்கிவிடும்.

தமிழக அரசின் வீட்டு வசதி திட்டங்களை செயல்படுத்தும் அதிகாரம் மாவட்ட ஊராட்சி முகமைகளிடருந்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு மாற்றப்படும் பட்சத்தில் இந்த சங்கங்கள் வலிமையடைவதுடன், புதிய வேலைவாய்ப்புகளும் கூட உருவாகும்.

எனவே, கூட்டுறவுத் துறை உயரதிகாரிகள் குழுவை அமைத்து, அதன் மூலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு புத்துயிரூட்டும் திட்டத்தை வகுத்து, உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதற்கு முன்பாக கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு நிலுவை ஊதியத்தை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

click me!