பெட்ரோல் பங்கில் பணம் கொடுக்காமல் தகராறு… தட்டிக்கேட்ட போலீஸ் மூக்கை உடைத்த கஞ்சா குடிக்கி சகோதரர்கள்..!

By manimegalai aFirst Published Oct 9, 2021, 12:40 PM IST
Highlights

வழியில் வண்டி நின்றுவிட்டதாகக் கூறி பெட்ரோல் வாங்கியுள்ளனர். பின்னர் பணம் கொடுக்காமல் சென்றவர்களை ஊழியர் தடுத்து நிறுத்தியபோது அவரை தாக்க முற்பட்டனர்.

வழியில் வண்டி நின்றுவிட்டதாகக் கூறி பெட்ரோல் வாங்கியுள்ளனர். பின்னர் பணம் கொடுக்காமல் சென்றவர்களை ஊழியர் தடுத்து நிறுத்தியபோது அவரை தாக்க முற்பட்டனர்.

சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் இரண்டு கேனுடன் வந்து பெட்ரோல் கேட்டுள்ளனர். வரும் வழியில் வண்டி நின்றுவிட்டதாகவும், அதனால் 50 ரூபாய்க்கு கேனில் பெட்ரோல் கொடுங்கள் என்று கூறி வாங்கியவர்கள், பின்னர் பணம் கொடுக்காமல் செல்ல முற்பட்டனர்.

அப்போது இருவரையும் தடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெகன், பணம் கொடுக்குமாறு கேட்டார். ஆத்திரமடைந்த இருவரும் ஜெகனை தாக்க முற்பட்டனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணிக்கு சென்ற முதல் நிலை காவலர் கார்த்திக்கேயன், கஞ்சா போதையில் இருந்த இருவரையும் மடக்கிப்பிடித்தார். அவர்களை விசாரித்ததில் இருவரும் தியாகராயர் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் அஜித்குமார், தினேஷ் குமார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்றபோது காவலர் கார்த்திக்கேயன் மூக்கில், போதையில் இருந்த தினேஷ் ஒரு குத்துவிட்டுள்ளான். பலமாக குத்தியதில் போலீஸின் மூக்கு உடைபட்டு ரத்தம் பீரிட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் போலீஸார் போதையில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.

முதல் நிலை காவலர் கார்த்திகேயன், பெட்ரோல் பங்க் ஊழியர் ஜெகன் ஆகியோர் கொடுத்த புகாரில் அஜித்குமார், தினேஷ்குமார் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சகோதரர்கள் இருவர் மீது சென்னை மெரினா, மயிலாப்பூர், மாம்பலம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

click me!