கொரோனா நோயாளியிடம் பகல் கொள்ளை அடித்த பிரபல தனியார் மருத்துவமனை... தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

By vinoth kumarFirst Published Aug 2, 2020, 10:42 AM IST
Highlights

கொரோனா சிகிச்சைக்கு 12 லட்சம் கட்டணம் வசூலித்த பி - வெல் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொரோனா சிகிச்சைக்கு 12 லட்சம் கட்டணம் வசூலித்த பி - வெல் மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொரோனா என்ற உயிர்க்கொல்லி மக்களை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதற்குச் சிகிச்சை என்ற போர்வையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் கொள்ளை கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்த சூழலில் தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கான கொரோனா சிகிச்சை கட்டணத்தை நிர்ணயித்தது.

அதன்படி பொது வார்டில் அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு a1 மற்றும் a2 கிரேடுக்கு ரூ.7,500 மற்றும் a3 மற்றும் a4 கிரேடுக்கு ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு a1 ,a2, a3, a4 கிரேடுக்கு ரூ.15,000 நிர்ணயித்து, இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்று  அரசு கடும் எச்சரித்திருந்தது. 

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்ததாக தொடர்ந்து புகார் எழுந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள பி- வெல் மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்கு 12 லட்சம் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சுகாதாரத்துறை மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்தறை வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் மருத்துவமனைகள் அரசுடன் இணைந்து கொரோனா நோய்க்கான சிகிச்சைகளை மக்களுக்கு வழங்கிட அனுமதி அளித்து வருகிறது. சிகிச்சைகள் தொடர்பான உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி நடைமுறைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. இந்நிலையில் அதிகபட்ச கட்டணங்கள் நிர்ணயித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பி- வெல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நோயாளி ஒருவருக்கு 19 நாட்களுக்கான சிகிச்சைக்கு 12,20 லட்சம் வசூலிக்கப்பட்ட விவரம் உறுதிசெய்யப்பட்டது.

மேலும், தனியாரது சிகிச்சைக்கு அரசு வழங்கிய நெறிமுறைகளின்படி கூடுதல் சிறப்பு மருந்துகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் பி - வெல் மருத்துவமனைக்கு கொரோனா நோய் சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அரசு அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!