தமிழகத்திற்கு தடையில்லாத ஆக்ஸிஜன்... நாளைக்குள் மத்திய அரசுக்கு ஐகோர்ட் பிறப்பித்துள்ள அதிரடி ஆணை...!

By Kanimozhi PannerselvamFirst Published May 6, 2021, 5:06 PM IST
Highlights

தமிழகத்திற்கு தடையில்லா அக்சிஜன் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதிசெய்யும்படி மத்திய அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை, ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி  அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், செங்கல்பட்டு மருத்துவமனை மரணங்களுக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர்.  சுகாதார செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆஜராகி மே 1, 2 ஆம் தேதிகளில் 220 டன் அக்சிஜன் தமிழ்நாடு வந்தது என்றும், மே 2ஆம் தேதி நடந்த கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்த 475 டன் என்பதை முறையாக ஒதுக்கவில்லை என்று தெரிவித்தார். 

தமிழகத்தில் உற்பத்தியாகும் 400 டன்னிலிருந்து 60 டன் ஆந்திரா தெலுங்கானாவிற்கு அனுப்பப்படுவதாக தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மையத்தில் 150 டன் உற்பத்தி செய்வது சென்னை மற்றும் செங்கல்பட்டிற்கு முக்கிய பங்களிப்பை செய்துவந்ததாக குறிப்பிட்டார். தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கும் அங்கிருந்து அனுப்பப்படுகிறது என்றும் தெரிவித்தார். தினமும் 475 டன் தேவைப்படும் என மத்திய அரசே நிர்ணயித்துள்ள நிலையில் அதை அனுப்பாததால், அதை வழங்குவதை உறுதிபடுத்த வேண்டுமென கோரிக்கை தெரிவித்தார். செங்கல்பட்டில் மரணமடைந்த 13 பேரும் கொரோனா தொற்று இல்லாத நோயாளிகள் என்றும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏற்படவில்லை என விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குனரும், நோடல் அதிகாரியுமான உமாநாத் ஆஜராகி, கேரளாவில் உள்ள பாலக்காடு அருகில் கஞ்சிக்கோட்டில், உற்பத்தியாகும் 40 டன்னை தமிழக தென் தமிழகத்திற்கு தொடர்ந்து வழங்கிய நிலையில் நிறுத்திவிட்டதால், மீண்டும் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். தமிழகம் தெலுங்கானாவை விட்டுவிட்டு நேற்று மத்திய அரசு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். கையிருப்பு சிலிண்டர்கள் நாளை (வெள்ளி) வரை மட்டுமே இருக்கும் என்றும், அதற்கு அடுத்த நாள் (சனிக்கிழமை) மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம் என அச்சம் தெரிவித்தார்.

படுக்கை விவரங்களை பொறுத்தவரை ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகள் தவிர மற்ற படுக்கைகள் போதிமான அளவில் உள்ளதாக ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.  தடுப்பூசிகளை பொறுத்தவரை 18 - 45 வயதினருக்கான அளவை மாநில அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றும், 10.3 லட்சம் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அதற்கான தொகை மே 5ஆம் தேதி முழுத்தொகையும் செலுத்தி உள்ளதாக உமாநாத் தெரிவித்தார்.  ரெமிடெசிவிர் மருந்தை பொறுத்தவரை 2.50 லட்சம் கேட்டதில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதன்படி 24 ஆயிரம் குப்பிகள் கீழ்ப்பாக்கம் மையத்தில் விற்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவான அளவில் இருப்பதாக உமாநாத் தெரிவித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வர், கோவை மதுரையில் ஓரிரு நாட்களில் பிற நகரங்களில் விற்பனை மையங்களை துவங்க அறிவுறுத்தி உள்ளதாக உமாநாத் தெரிவித்தார். ரெம்டெசிவிர் கள்ளச்சந்தை விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், சென்னையில் பரவும் சவாலை சமாளிக்க இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி,  ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 25 டன் தெலுங்கானாவிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் உற்பத்தி நிலை ஒரு வாரத்தில் தெரியும் என விளக்கம் அளித்தார். 

 ஆக்சிஜன் ஒதுக்குவதில் எவ்வித குறைபாடும் இல்லை என விளக்கம் அளித்தார். ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகரிக்க  மேலும் 7 நிறுவனங்களை இந்த வார இறுதியில் அனுமதிக்க இருப்பதாகவும், காப்புரிமை தொடர்பான விவகாரத்தையும் கருத்தில் கொள்ள் வேண்டியுள்ளதாக தெரிவித்தார். வெளிநாட்டு உதவிகளை 45 முதல் ஒரு மணி நேரத்தில் சுங்க துறை ஒப்புதல் அளிக்கிறது. செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் செயல்பாட்டுக்கு கொண்டுவர அடுத்தவாரம் விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார். ஆக்சிஜன் ஒதுக்கீடு உத்தரவிற்காக காத்திருக்காமல் ஆக்சிஜனை அனுப்ப நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் ஓரிரு நாளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் உள்ளதால் முறையாக ஒதுக்கீடு செய்வதை உறுதிபடுத்த  அறிவிறுத்தியுள்ளனர். வட மாநிலன்களில் டி.ஆர்.டி.ஓ. ஆக்சிஜன் உற்பத்திக்கு விரைந்து செய்தது போல தென் மாநிலங்களுக்கு செய்ய மத்திய அரசு அதிகாரத்திற்கு உட்பட்டு செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

புதுச்சேரி அரசு வக்கீல் மாலா ஆஜராகி 2997 படுக்கைகள் உள்ளதாகவும், ஆக்சிஜன் போதுமான அளவில் உள்ளதாகவும் ரெம்டெசிவிர் மருந்து 4150 குப்பிகள் வந்ததாகவும், 2106 இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். 807 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளதாக தெரிவித்தார். ஆளுநரே மருத்துவர் என்பதால் மருத்துவமனைகளுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து வருகிறார் என்றும் தெரிவித்தார்.

புதுச்சேரியில் உண்மை நிலைமை வெளிப்படுத்தவில்லை என வழக்கறிஞர் ஞானசேகர் ஆஜராகி குற்றம்சாட்டினார். அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என புதுச்சேரி அரசு இணையதளத்தில் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே காலியாக இருப்பதாகவும் குற்றம் சுமந்தினார். அப்போது நீதிபதிகள் புதுச்சேரியையும் கண்காணித்து வருவதாகவும், மனுதாரர் வைத்துள்ள விவரங்களை நீதிமன்றத்திடமும், அரசிடமும் கொடுக்க அறிவுறுத்தினர்.

பாலாஜி ராம் தரப்பில் 50 ஆயிரம் அக்சிஜன் மருத்துவமனைகள், ஐஐடி நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்க வேண்டும், கொரோனா சிகிச்சைக்கு பெயரளவுற்கு மட்டுமே வசூலிக்க வேண்டும், ரெம்டிவிசிர் மருத்து அஞ்சல் அல்லது என்.ஜி.ஓ., அம்மா கிளினிக்குகள் மூலம் வழங்க் வேண்டும், 15 நாட்கள் முழு ஊரடங்கு, மற்ற ஆக்சிஜன் நிறுவனங்களையும் அக்சிஜன் வழங்க அறிவுறித்த வேண்டும், ஆக்சிஜன் வசதியுடைய ஆம்புலன்களை ஏற்படுத்த வேண்டும், மருத்துவமனை கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பி.ஏ.ஜோசப் தரப்பில் மாற்றுமுறை மருத்துவ முறைக்கு முக்கியத்துவம் அளிப்பது குறித்தும் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, இதில் தாங்கள் நிபுணர் இல்லை என்றும் அரசு பரிசீலித்து முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி ரெம்டிவிசிர் மற்றும் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசிற்கு முறையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென தெரிவித்தார். 

பின்னர் உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, தமிழகத்திற்கு தேவையான அக்சிஜன் ஒதுக்கீடு செய்வதற்கு நாளைக்குள் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும், வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் வாழ்வு பறிபோய்விடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்குவதில் சமமான பங்கீடு இருக்க வேண்டுமென மத்திய அரசிற்கு உத்தரவிட்டுள்ளனர். மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாததால் மரணங்கள் ஏற்படுவதை தடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும் தமிழக அரசிற்கு உத்தரவிட்டனர்.

மதுரை, கோவை போன்ற நகரங்களில் டி.ஆர்.டி.ஓ. மூலம் போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கவும் அறிவுறித்தி உள்ளனர். மூன்றாவது அலை உருவாகும் அச்சம் எழுந்துள்ள நிலையில் தடுப்பூசி விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்டனர். புதுச்சேரியை பொறுத்தவரை ஆக்சிஜன், படுக்கை ஆகியவை போதுமானதாக இருந்தாலும், எதிர்காலத்தை கருத்தில்கொண்டு கவனமாக செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினர். படுக்கை விவரங்களை குழப்பம் இல்லாமல் வெளியிடவும் அறிவுறுத்தினர். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் பல கடுமையான உத்தரவுகளை இன்று முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அமல்படுத்துவது கொரோனாவின் பரவலை குறைக்கும் என நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்தனர். வழக்கு மே 12ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வழக்கு தள்ளிவைப்பட்ட நிலையில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகி ஆக்சிஜன் ஒதுக்கீடு உத்தரவிற்காக காத்திருக்காமல் ஆக்சிஜனை அனுப்ப நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

click me!