Chennai Rain: சென்னையை புரட்டி போட்ட கனமழை.. மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 3 பேர் துடிதுடித்து உயிரிழப்பு.!

By vinoth kumarFirst Published Dec 31, 2021, 7:36 AM IST
Highlights

சென்னை மயிலாப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தான். கனமழையால் வீட்டின் வெளியே மழைநீர் தேங்கியுள்ளது. அந்த நீரில் மின் வயர் அறுந்து கிடந்த நிலையில் அதில் கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சென்னை பெய்த கனமழையில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உட்பட அடுத்தடுத்து 3 பேர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று பிற்பகலில் சாரம் மழை தொடங்கிய நிலையில் நேரமாக நேரமாக கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 10 மணிநேரத்திற்கு மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் சென்னை நகர் முழுவதும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. முக்கிய சாலைகளான அண்ணாசாலை, பூந்தமல்லி பெரியார் நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை, 100 சாலை என நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கிய சில இடங்களில் வாகன போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. இதே நிலைதான் சென்னை புறநகர் பகுதியில் காணப்பட்டது. 

இதுதவிர கெங்குரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, ஆர்பிஐ சுரங்கப் பாதைகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் இந்த 4 சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் கனமழை காரணமாக மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தான். கனமழையால் வீட்டின் வெளியே மழைநீர் தேங்கியுள்ளது. அந்த நீரில் மின் வயர் அறுந்து கிடந்த நிலையில் அதில் கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அதேபோல், ஓட்டேரி நியூ பேரண்ட்ஸ் சாலையில் வசித்து வந்தவர் மூதாட்டி தமிழரசி. பலத்த மழையால் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் அதில் நடந்து சென்ற மூதாட்டி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் மீனா(45). புளியந்தோப்பில் உள்ள அம்மையம்மாள் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

அந்த பகுதியில் மழை சற்று ஓய்ந்த நிலையில் கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் அப்போது வீட்டின் இரும்பு கேட்டை தொட்ட போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. உடனே மயக்கமடைந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சென்னையின் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!