சென்னை பீச் ஸ்டேஷன் ரயில் விபத்து.. காரணம் இதுதான்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

By vinoth kumarFirst Published Apr 26, 2022, 12:57 PM IST
Highlights

சென்னை பணிமனையில் இருந்து சென்னை பீச் கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று பயணிகள் இன்றி காலியாக சென்றுக் கொண்டிருந்தது. ஒன்றாம் நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த மின்சார ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நடந்த மின்சார ரயில் விபத்துக்கு ஓட்டுநரின் தவறே காரணம் என முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் விபத்து

சென்னை பணிமனையில் இருந்து சென்னை பீச் கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று பயணிகள் இன்றி காலியாக சென்றுக் கொண்டிருந்தது. ஒன்றாம் நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த மின்சார ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக அந்த மின்சார ரயில் ஒன்றாம் நடைமேடையின் மீது ஏறி அங்குள்ள கட்டுமானம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். 

விசாரணை

இதையடுத்து விபத்துக்குள்ளான மின்சார ரயிலை நடைமேடையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனையடுத்து, சுமார் 9 மணிநேரத்திற்கு பிறகு ரயில் மீட்கப்பட்டது. கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் முதலாம் நடைமேடையில் சுமார் 100 மீட்டருக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டு பொதுமக்களை ஏற்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக ரயிலை இயக்கியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஓட்டுநர் பவித்திரன் மீது எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், ஓட்டுநர் பவித்திரனிடம் நடத்திய தொடர் விசாரணையில் அவர் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால், ரயில்வே துறையின் விசாரணை அறிக்கைக்கு பின்பு ஓட்டுநர் பவித்திரன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

click me!