கண்ணிமைக்கும் நேரத்தில் கார் தடுப்புச்சுவரில் மோதி உருண்டு விபத்து... 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு..!

By vinoth kumarFirst Published Sep 29, 2019, 3:38 PM IST
Highlights

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அசுர வேகத்தில் சென்ற கார் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அசுர வேகத்தில் சென்ற கார் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னை வண்டலூர் அருகே இயங்கிவரும் கிரசண்ட் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் நண்பணின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக 7 பேர் சனிக்கிழமை இரவு கிழக்குக் கடற்கரை சாலைக்கு சென்றுள்ளனர். பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை 2 மணியளவில் ஈஞ்சம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி சில மீட்டர் தூரத்துக்கு உருண்டு சென்றுள்ளது.

இந்தக் கோர விபத்தில் அகமது பாகிம் மற்றும் முகமது சபின் ஆகிய 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில், ஒரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால் மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்து தொடர்பான சிசிடிவிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டியதே விபத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது. காரை ஓட்டிச் சென்ற மாணவனை கைது செய்த போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வார இறுதி நாட்களில் மதுபோதையில் ஏற்படும் விபத்துக்களை தடுப்பதற்காக நகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபடாதே விபத்துக்கான காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

click me!