தலைவிரித்தாடும் FEDEX கூரியர் மோசடி... சென்னையில் 5 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்..!

By Ganesh AFirst Published Apr 13, 2024, 10:37 AM IST
Highlights

சென்னையில் FEDEX கூரியர் மோசடியில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 லேப்டாப், 2 கணினிகள், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன். 41 வயதான இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 1ந் தேதி அன்று 'ஃபெடெக்ஸ்' கூரியரின் மும்பை கிளையில் இருந்து அழைப்பதாக கூறி ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. மும்பையில் இருந்து தைவானுக்கு லேப்டாப் மற்றும் ரூ.35000 ரொக்கம் அடங்கிய பார்சல் அனுப்பியதாக வேல்முருகனுக்கு போன் செய்தவர் அதில் போதைப்பொருள் இருந்ததாகவும் அதை மும்பை போலீசார் கைப்பற்றியதாகவும் கூறி இருக்கிறார். 

பின்னர் அந்த அழைப்பு மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டு, அவர் தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, போதைப்பொருள் அடங்கிய பார்சலை அனுப்பியதற்காக உங்களை கைது செய்வதாக வேல்முருகனை மிரட்டி இருக்கிறார். மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிக் கணக்கிற்கு மாற்றினால், விசாரணையில் இருந்து தப்பலாம் என கூறி இருக்கின்றனர். 

இதையும் படியுங்கள்... சென்னையில் ஆன்லைன் கூரியர் மோசடி: மக்களே உஷார் - போலீஸ் எச்சரிக்கை!

வேல்முருகனும் அதை நம்பி ரூ. 49,324-ஐ 'குறிப்பிட்ட' வங்கிக் கணக்கிற்கு அனுப்பி இருக்கிறார். பின்னர் அதுகுறித்து வங்கிக்கு சென்று விசாரித்தபோது தான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இந்த மோசடி தொடர்பாக கொளத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார், சைபர் கிரைம் பிரிவினரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினர். வங்கிக் கணக்கை கண்காணித்ததன் மூலம் ஐந்து பேர் சிக்கி உள்ளனர். விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த முகமது அசாருதீன்( 26), ராஜ்குமார் (56), கணேஷ் ராஜ் (26), எபினேசர் (24), ரத்தினராஜ் (48) என தெரியவந்தது. 

விசாரணையில் அவர்கள் போலி அலுவலகம் ஒன்றை அமைத்து, மும்பை போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி பொதுமக்களை தொலைபேசி வாயிலாக ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர், கைது செய்யப்பட்ட அந்த 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள்... இரண்டே மாதங்களில் 390 வழக்குகள்.. FedEx கூரியர் மோசடி நிகழ்வது எப்படி? இதை எவ்வாறு தடுப்பது?

click me!