கருப்பு பூஞ்சையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.. தலைநகரில் தயார் நிலையில் 312 படுக்கைகள்..!

By vinoth kumarFirst Published Jun 3, 2021, 11:55 AM IST
Highlights

சென்னை அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 119 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தயார் நிலையில் 312 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 119 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தயார் நிலையில் 312 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றின் 2வது அலை மிக வேகமாக பரவிவரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிகை குறைந்து, குணமடைகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக படிப்படியாக குறைந்து 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. 

இந்நிலையில் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் வட மாநிலங்களில் அதிகமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கருப்பு பூஞ்சை நோய் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், அதிக அளவில் ஸ்டிராய்டு மருந்து எடுத்துகொள்பவர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.

இந்த கருப்பு பூஞ்சை நோயினை ஆரம்பத்திலே கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் 13 மருத்துவ வல்லூநர்களை கொண்டு தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ஆம்போடெசிவர்-பி மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனியாக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 26 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 படுக்கைகளும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகளும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 60 படுக்கைகள் என 312 படுக்கைகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 112 பேர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில்  2 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 5 பேர் என கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு மொத்தம் 119 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

click me!