குறைவான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்தான் உலகின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தில் 300-வது விக்கெட்டை கைப்பற்றினார் அஸ்வின். குறைந்த எண்ணிக்கையிலான அதாவது 54 டெஸ்ட் போட்டிகளில் இத்தனை விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
முன்னதாக, 1981-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லிலீ 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 36 ஆண்டுகள் சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார்.
இந்தச் சாதனை புரிந்ததற்காக அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முரளிதரனும், அஸ்வினைப் பாராட்டியுள்ளார்.
அவர் கூறியது, "54 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்த அஸ்வினுக்கு வாழ்த்துக்கள். இது அவ்வளவு எளிதான காரியமல்ல. இன்றைய நிலையில், உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் என்றால் அது மிகையல்ல.
இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் இல்லை. எனினும், கூடிய விரைவில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் பங்கேற்று பல்வேறு சாதனைகளைப் புரிய வேண்டும் என்று விரும்புகிறேன்.
அஸ்வினுக்கு தற்போது 31 வயதாகிறது. இன்னும் அவர் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புதிய சாதனைகளைப் படைக்கலாம். அதுவும், அவருக்கு காயம் எதுவும் ஏற்படாமல், சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே சாத்தியப்படும். 35 வயதைக் கடந்து விட்டால் சிறப்பான ஆட்டம் என்பது கொஞ்சம் சிரமம்தான்" என்றார் அவர்.