2012-ல் இதே நாள்.. தோனியை குற்றம்சாட்டிவிட்டு ஓய்வு பெற்ற லட்சுமணன்

By karthikeyan VFirst Published Aug 18, 2018, 5:57 PM IST
Highlights

2012ம் ஆண்டு இதே நாளான ஆகஸ்ட் 18ம் தேதி இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் வீரரான விவிஎஸ்.லட்சுமணன், தோனி மீது குற்றம்சாட்டிவிட்டு ஓய்வை அறிவித்தார். 
 

2012ம் ஆண்டு இதே நாளான ஆகஸ்ட் 18ம் தேதி இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் வீரரான விவிஎஸ்.லட்சுமணன், தோனி மீது குற்றம்சாட்டிவிட்டு ஓய்வை அறிவித்தார். 

இந்திய அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக வலம்வந்தவர் லட்சுமணன். நான்காவது இன்னிங்ஸில் பலமுறை போராடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தவர். அதனாலேயே நான்காம் இன்னிங்ஸ் நாயகன் என்றுகூட அழைக்கப்பட்டார். அதிலும் 2001ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை நோக்கி சென்ற இந்திய அணியை ராகுல் டிராவிட்டுடன் இணைந்து மீட்டெடுத்தவர் லட்சுமணன். அந்த போட்டியில் அவர் அடித்த 281 ரன்கள் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத ஸ்கோர்.

இதேபோன்று பலமுறை, நான்காம் இன்னிங்ஸில் போராடி இந்திய அணியை வெற்றி பெற செய்தவர். 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடிய லட்சுமணன், ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் கிரிக்கெட் ஆடிய 16 ஆண்டுகளில் நடந்த ஒரு உலக கோப்பைக்கான இந்திய அணியில்கூட அவர் இடம்பெறவில்லை என்பது வேதனைக்குரிய தகவல்.

1996ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்த லட்சுமணன், 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதம், 56 அரைசதம் உட்பட 8781 ரன்கள் குவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அந்த டெஸ்ட் தொடரில் லட்சுமணன் சேர்க்கப்பட்டிருந்தார். 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி லட்சுமணனின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடந்தது. அந்த சமயத்தில் லட்சுமணன் மீது சரியாக ஆடுவதில்லை; இளம் வீரர்களுக்கு வழிவிடலாம் என்ற விமர்சனங்கள் இருந்தன. அதனால் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட விரும்பாத லட்சுமணன் திடீரென ஓய்வை அறிவித்தார். சிறந்த டெஸ்ட் வீரராக வலம்வந்த லட்சுமணன், அவரது சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆடிவிட்டு, சொந்த மண்ணில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெற்றிருக்கலாம்.

ஆனால் அந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தும் அதில் ஆடாமல் ஓய்வு முடிவை 2012ம் ஆண்டு இதே தினத்தில் அறிவித்தார். தனது ஓய்வு முடிவை அப்போதைய கேப்டனான தோனியிடம் கூறுவதற்காக அவரை தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்ததாகவும் தோனியை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் குற்றம்சாட்டினார். 

அதன்பிறகு லட்சுமணன் தனது வீட்டில் மற்ற வீரர்களுக்கு கொடுத்த விருந்திற்கு கூட தோனியை அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!