
இந்திய கேப்டன் விராட் கோலி, தான் என்ற கர்வத்தோடு செயல்பட்டால் இந்திய அணிக்கு பயிற்சியாளரே தேவையில்லை என்று முன்னாள் இந்திய வீரர் எரபள்ளி பிரசன்னா வெளுத்து வாங்கியுள்ளார்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் பதவி விலகலுக்கு காரணமான கோலி கடும் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறார்.
முன்னாள் இந்திய வீரர் எரபள்ளி பிரசன்னா இதுகுறித்து கூறியது:
“கேப்டன்தான் "பாஸ்' என்றால், பயிற்சியாளர் எதற்கு? அவர்களுக்கு பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் தேவையில்லை என்று நினைக்கிறேன். கோலி தலைசிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவர் சிறந்த கேப்டனா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.
தலைசிறந்த கிரிக்கெட் வீரரான அனில் கும்ப்ளே போன்றவர்களுக்கே மரியாதை கிடைக்காவிட்டால், உதவிப் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர், ஸ்ரீதர் ஆகியோருக்கு கோலியிடம் பேசக்கூடிய துணிச்சல் நிச்சயம் இருக்காது.
இந்திய அணிக்கு உடற்பயிற்சியாளர் மட்டுமே போதுமானதாகும். கோலி, தான் என்னும் கர்வத்தோடு செயல்பட்டால், இந்திய அணிக்கு பயிற்சியாளரே தேவையில்லை. எல்லாவற்றுக்கும் கோலியே பொறுப்பேற்றுக்கொண்டால், பழைய காலத்தைப் போன்று மேலாளர் ஒருவரை மட்டும் நியமிக்க வேண்டியதுதான்.
யுவராஜ் சிங், தோனி போன்ற மூத்த வீரர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களை சேர்க்க வேண்டிய தருணம் இது. தோனி, யுவராஜ் ஆகியோரால் 2019 உலகக் கோப்பை போட்டி வரை விளையாட முடியும் என நினைக்கவில்லை. ஏனெனில், அப்போது அவர்கள் 38 வயதை எட்டியிருப்பார்கள். எனவே, திறமையான இளம் வீரர்கள்தான், இந்திய அணியின் இப்போதைய தேவை.
மேற்கிந்தியத் தீவுகள் அணி இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது. அந்தத் தொடரில் ஏராளமான இளம் வீரர்களுக்கு தேர்வுக் குழுவினர் வாய்ப்பளித்திருக்க வேண்டும்” என்று வெளுத்து வாங்கினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.